மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; செல்போன் கடைக்காரர் பலி


மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; செல்போன் கடைக்காரர் பலி
x
தினத்தந்தி 6 Oct 2018 9:45 PM GMT (Updated: 6 Oct 2018 5:43 PM GMT)

மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் செல்போன் கடைக்காரர் பலியானார்.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). இவர் மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகில் செல்போன் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு கடை வியாபாரத்தை முடித்து விட்டு திருக்கழுக்குன்றம் சாலை வழியாக பூஞ்சேரியில் உள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மாமல்லபுரம் நோக்கி வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் சுரேஷ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்ட சுரேஷ் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சுரேஷ் இறந்தார். இறந்த சுரேசுக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story