சென்னை புறநகர் பகுதி ஏரிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு


சென்னை புறநகர் பகுதி ஏரிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 6 Oct 2018 11:00 PM GMT (Updated: 6 Oct 2018 7:54 PM GMT)

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

தாம்பரம்,

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் இரும்புலியூர், ராஜகீழ்ப்பாக்கம், கீழ்கட்டளை ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சென்று நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் கிழக்கு தாம்பரம் அந்தோணி தெருவில் நடைபெறும் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.
அதன்பிறகு நிருபர்களிடம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 924 ஏரிகள் உள்ளது. அதில் 3 ஏரிகள் 100 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது. அந்த ஏரிகளில் உடைப்புகள் ஏற்படாதவாறு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த ஏரிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

மேலும் 13 ஏரிகள் 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதம் வரை கொள்ளளவை எட்டியுள்ளது. அந்த ஏரிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 74 ஏரிகள் 50 சதவீதத்துக்கும் குறைவாகவும், மீதமுள்ள ஏரிகள் 25 சதவீதத்துக்கு கீழேயும் நிரம்பி உள்ளன.

பஞ்சாயத்து யூனியன் கட்டுப்பாட்டில் 968 சிறிய ஏரிகள் உள்ளது. அந்த ஏரிகள் 25 சதவீதத்துக்கும் கீழேதான் இதுவரை நிரம்பி உள்ளது. மழைவரும் காலங்களில் அவைகளை தொடர்்ச்சியாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்து யூனியன் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் அனைத்தையும் பொறியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு 10 கண்காணிப்பு அதிகாரிகளை முதல்-அமைச்சர் நியமித்து இருக்கிறார். அவர்கள் உணவு பாதுகாப்பு ஆணையாளர் அமுதா தலைமையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

2015-ம் ஆண்டைவிட கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பு குறைவாக இருந்தது. தற்போது அதைவிட முன்னெச்சரிக்கை பணிகள் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளதால் இந்த ஆண்டு வெள்ள பாதிப்பு குறைவாகவே இருக்கும். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story