தூத்துக்குடி அருகே நடுக்கடலில் மீட்கப்பட்ட 19 மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பினர்


தூத்துக்குடி அருகே நடுக்கடலில் மீட்கப்பட்ட 19 மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பினர்
x
தினத்தந்தி 10 Oct 2018 9:45 PM GMT (Updated: 10 Oct 2018 9:09 PM GMT)

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் மீட்கப்பட்ட 19 மீனவர்கள் நேற்று அதிகாலையில் பத்திரமாக கரைக்கு வந்து சேர்ந்தனர்.

தூத்துக்குடி, 


காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்பாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை தொடர்ந்து கடந்த 5-ந் தேதிக்குள் மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டனர். அப்போது தருவைகுளத்தில் இருந்து கடந்த 1-ந் தேதி 2 படகுகளில் மீன்பிடிக்க சென்ற 19 மீனவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

இதனால் தூத்துக்குடி கடலோரகாவல்படையினர் டோனியர் ரக சிறிய விமானம் மற்றும் ரோந்து கப்பல் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கன்னியாகுமரியில் இருந்து சுமார் 105 கடல் மைல் தொலைவில் மீனவர்களின் படகுகளை கடலோர காவல்படையினர் கண்டுபிடித்தனர். தொடர்ந்து கடலோர காவல்படை ரோந்து கப்பல் அபிராஜ் 2 விசைப்படகு மற்றும் 19 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர். அவர்கள் நேற்று அதிகாலையில் தருவைகுளம் வந்து சேர்ந்தனர்.

இது குறித்து மீனவர் ஒருவர் கூறியதாவது:- எங்களுக்கு புயல் எச்சரிக்கை பற்றி எதுவும் தெரியாது. நாங்கள் வழக்கம் போல் மீன்பிடித்து கொண்டு இருந்தோம். கடந்த 9-ந் தேதி ஒரு தனியார் கப்பல் அந்த பகுதியில் வந்தது. அந்த கப்பலில் இருந்து எங்களுக்கு புயல் எச்சரிக்கை குறித்த தகவலை தெரிவித்தனர். இதனால் நாங்கள் சுமார் 20 கடல்மைல் கரையை நோக்கி நகர்ந்து வந்தோம். அப்போது கடலோர காவல்படையினர் அங்கு வந்தனர். அவர்கள் எங்களை பத்திரமாக கரைக்கு அழைத்து வந்தனர்.

இது குறித்து படகு உரிமையாளர் ரவி கூறியதாவது:-

எங்கள் விசைப்படகு கடந்த 1-ந் தேதி கடலுக்கு சென்றது. அப்போது எந்த புயல் எச்சரிக்கை தகவலும் கிடையாது. அதன்பிறகு எச்சரிக்கை வந்த போது, எனது படகை பல வழிகளில் தொடர்பு கொள்ள முயன்றும் முடியாமல் போனது. இதனால் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தோம். தொடர்ந்து மீனவர்களை தேடும் பணி நடந்தது.

அதே நேரத்தில் படகு எந்த இடத்தில் உள்ளது என்பதை காண்பிக்கும் நவீன தகவல் தொடர்பு சாதனம்(டிரான்ஸ்பாண்டர்) படகில் இருந்தது. அதே சாதனம் மற்றொரு படகிலும் உள்ளது. அதன் மூலம் படகு இருக்கும் இடம் குறித்த விவரங்களை அறிந்து கடலோர காவல்படைக்கு தெரிவித்தோம். கடலோர காவல் படையினர் மீனவர்களை பத்திரமாக மீட்டு வந்தனர். இதனால் தான் எங்கள் படகு மீட்கப்பட்டு உள்ளது. இந்த சாதனத்தை அரசு அனைத்து படகிலும் வைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். 

Next Story