திருச்சியில் இருந்து 136 பேருடன் துபாய் சென்றபோது சுற்றுச்சுவரை உடைத்து பறந்த விமானம் விபத்தில் இருந்து தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்


திருச்சியில் இருந்து 136 பேருடன் துபாய் சென்றபோது சுற்றுச்சுவரை உடைத்து பறந்த விமானம் விபத்தில் இருந்து தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 13 Oct 2018 12:15 AM GMT (Updated: 12 Oct 2018 10:12 PM GMT)

திருச்சியில் இருந்து துபாய் புறப்பட்டபோது விமான நிலையத்தின் சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு விமானம் பறந்து சென்றது. அதில் இருந்த 136 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருச்சி,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு சேவை தவிர துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருச்சியில் இருந்து துபாய்க்கு தினமும் விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் விமானம் ஒன்று தினமும் அதிகாலை 1.15 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு துபாய்க்கு செல்வது வழக்கம்.

துபாயில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு வந்த இந்த விமானம், வழக்கம் போல் நேற்று அதிகாலை 1.15 மணிக்கு மீண்டும் துபாய்க்கு புறப்பட தயாரானது. துபாய் செல்வதற்காக வந்திருந்த பயணிகள் 130 பேரும் அதில் ஏறி அமர்ந்தனர். அதில் விமானி (பைலட்) உள்பட 6 ஊழியர்களும் இருந்தனர். விமானி கணேஷ் பாபு விமானத்தை ஓடுபாதையில் செலுத்தினார்.

ஓடுபாதையின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதி நோக்கி ஊர்ந்து வந்த விமானம் தரையில் இருந்து எழும்பி பேரிரைச்சலுடன் மேலே பறக்க முயன்றது. அப்போது விமானத்தின் பின்பக்க சக்கரங்கள் ஓடுபாதையின் கடைசி பகுதியில் இருந்த ஐ.எல்.எஸ். எனப்படும் ஆண்டெனா கருவிகள் மீது மோதி, அதன் அருகில் உள்ள விமான நிலையத்தின் சுற்றுச்சுவரின் மேல் பகுதியை உடைத்துக்கொண்டு பறந்தது.

விமானத்தின் சக்கரங்கள் இடித்ததால் சுமார் 10 அடி உயரம் உள்ள அந்த சுற்றுச்சுவரின் மேல் பகுதியில் 2 இடங்களில் தலா 5 அடி அகலத்திற்கு சுவர் இடிந்து விழுந்தது. 5 ஆண்டெனா கருவிகளும், ஒரு கண்காணிப்பு கருவியும் வளைந்து சேதம் அடைந்தன. இந்த சம்பவம் சரியாக அதிகாலை 1.19 மணிக்கு நடந்தது. ஆனாலும் விமானம் எந்த வித பிரச்சினையும் இன்றி வானில் பறந்தது.விமானத்தின் சக்கரங்கள் மோதியதில் சுற்றுச்சுவர் உடைந்து விழுந்ததை அருகில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தில் நின்று கொண்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் அவரது உயர் அதிகாரிகளுக்கும், விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் உள்பட அதிகாரிகள் குழுவினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் அங்கு வந்தனர். உடனடியாக கட்டுப்பாட்டு அறை மூலம் அந்த விமானிக்கு விபத்து நடந்திருப்பது பற்றி தகவல் கொடுக்க முயன்றனர். ஆனால் அதற்குள் விமானம் திருச்சி வான் எல்லையை தாண்டி சென்று விட்டதால் பெங்களூரு விமான நிலைய கட்டுப்பாட்டு அறை மூலம் விமானியை தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

மேலும் திருச்சி விமான நிலையத்தில் விமானங்கள் இறங்குதல், மற்றும் ஏறுவதற்கு வழிகாட்டியாக இருக்கும் ஐ.எல்.எஸ். கருவிகள் விமானம் மோதியதில் சேதம் அடைந்து இருப்பது பற்றி விமான நிலைய ஆணைய குழும அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விட்டு வி.ஓ.ஆர். என்ற மாற்று வழி மூலம் விமானங்களை இயக்குவதற்கு ஏற்பாடு செய்தனர். இதனால் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இறக்குவதில் எந்த வித பிரச்சினையும் ஏற்படவில்லை.

சுற்றுச்சுவரை இடித்து தள்ளி விட்டு பறந்து சென்ற விமானம் எந்த வித சேதமும் இன்றி துபாய் வரை பறக்க முடியுமா? அதில் உள்ள ஊழியர்கள் உள்பட 136 பயணிகளும் துபாய் வரை பாதுகாப்பாக போய் சேர முடியுமா? என்ற சந்தேகமும் அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. விமானம் சுற்றுச்சுவர் மீது மோதிய போது விமானத்தில் இருந்த பயணிகளுக்கு பெரிய அளவில் சத்தம் கேட்டுள்ளது. ஆனால் என்ன நடந்தது? எதனால் இந்த சத்தம்? என்று தெரியாமல் பயணிகள் உயிர் பயம் மேலோங்க ஆபத்தான பயணத்தை தொடர்ந்தனர்.

இதற்கிடையில் பிரச்சினைக்குரிய அந்த விமானம் மஸ்கட் நகர் அருகே சென்று விட்டது. அப்போது விமான நிலைய ஆணையக்குழும அதிகாரிகள் விமானத்தை மும்பை விமான நிலையத்தில் தரை இறக்குமாறு விமானிக்கு கட்டளை பிறப்பித்தனர்.

இந்த கட்டளையை ஏற்று விமானி கணேஷ் பாபு விமானத்தை மும்பை விமான நிலையத்தில் அதிகாலை 5.30 மணிக்கு தரை இறக்கினார். விமானம் பாதுகாப்பாக தரை இறங்கிய பின்னரே அதில் இருந்த 136 பயணிகளும், ஊழியர்களும் தாங்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதை எண்ணி ஆனந்த கண்ணீர் விட்டனர். மும்பையில் விமானம் தரை இறங்கிவிட்டது என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே திருச்சி விமான நிலைய அதிகாரிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

திருச்சியில் சுற்றுச்சுவர், ஆண்டெனா மீது மோதியதில் விமானத்தின் அடிபாகம் உடைந்து சேதம் அடைந்து இருந்தது. சுற்றுச்சுவரில் இருந்த கம்பி வலை விமானத்தின் சக்கரத்தில் சிக்கி இருந்தது. விமானம் மும்பையில் தரை இறங்கி பிறகு அதிகாரிகள் விமானத்தில் சோதனை நடத்திய பிறகு தான் இந்த சேத விவரம் தெரியவந்தது.

இந்த சேதங்களை ஆய்வு செய்த மும்பை அதிகாரிகள் விமானம் பெரிய விபத்தில் இருந்து தப்பி உள்ளது என்று திருச்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

ஓடு பாதையில் இருந்து மேலே எழும்பி உயர பறக்கும் நேரத்தில் விமானம் சுற்றுச்சுவரை சேதப்படுத்தி விபத்து ஏற்படுத்தியதற்கு விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமா? அல்லது விமானியின் கவனக்குறைவினால் இந்த விபத்து நடந்ததா? என தெரியவில்லை.

கிளம்பும் போது தாழ்வாகபறந்த விமானத்தினால் சுற்றுச்சுவர் மற்றும் கருவிகள் சேதம் அடைந்தது பற்றிய தகவல் விமான நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுற்றுச்சுவர் இடிந்த பகுதியை சுற்று வட்டார பகுதி மக்கள் மற்றும் திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு வேடிக்கை பார்த்தனர். அவர்களை போலீசாரும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் நிற்க விடாமல் தடுத்தனர்.

விமான நிலையத்தின் சுற்றுச்சுவரில் விமானத்தின் சக்கரங்கள் மட்டுமே மோதி இருப்பதால் விமானத்திற்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. விமானத்தின் உடல் பகுதி மோதி இருந்தால் விமானம் மேற்கொண்டு பறக்க முடியாமல் கீழே விழுந்து பெரிய அளவில் விபத்துக்குள்ளாகி 136 பயணிகளின் உயிரும் கேள்விக்குறியாகி இருக்கும்.

அத்துடன் தேசிய நெடுஞ்சாலை மற்றும் குடியிருப்பு பகுதியிலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். கடவுள் கருணையால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கிறது என இந்த விபத்து பகுதியை பார்த்தவர்கள் கூறினார்கள்.

விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபு தனது டுவிட்டர் பதிவில், திருச்சி விமான நிலையத்தில் விபத்து நடந்த இடத்துக்கு விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தியதாகவும், விமான பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய துணைக்குழு ஒன்றை ஏர் இந்தியா அமைத்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

இந்த விபத்து பற்றி விசாரணை நடந்து வருவதால் விமானிகள் கணேஷ் பாபு, அனுராக் ஆகிய இருவரும் பணி ஒதுக்கீடு பட்டியலில் இருந்து நீக்கக்கப்பட்டு இருப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருக்கிறது. அதாவது அவர்களுக்கு பணி ஒதுக்குவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

திருச்சி- துபாய் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று அதிகாலை 1.15 மணிக்கு புறப்பட்டது. ஓடுபாதையில் இருந்து ‘டேக் ஆப்’ ஆகி மேலே பறக்க முயன்ற போது விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. ஆனாலும் விமானம் எந்தவித பிரச்சினையும் இன்றி தொடர்ந்து வானில் பறந்தது. விமானம் ஏற்படுத்திய விபத்து, ஐ.எல்.எஸ். ஆண்டெனா கருவிகள் மற்றும் சுற்றுச்சுவர் சேதம் அடைந்தது பற்றி கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் விமானத்தை துபாயில் தரை இறக்குவதிலேயே குறியாக இருந்து உள்ளார். விபத்து பற்றி விமானத்தில் பயணித்த 130 பயணிகளுக்கும் தெரிய வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் பயணிகள் விமானம் புறப்பட்ட நேரமான அதிகாலை 1.15 மணியில் இருந்து விமானம் மும்பையில் தரை இறங்கிய நேரமான அதிகாலை 5.30 மணி வரை அதாவது 4¼ மணி நேரம் என்ன நடக்கிறது என தெரியாமல் ஒரு தவிப்புடனே இருந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் விபத்தை ஏற்படுத்திய விமானத்தை ஓட்டியவர் கணேஷ் பாபு என்ற விமானி ஆவார். மும்பையில் இவர் விமானத்தை தரை இறக்கியதும் விமான நிலையங்களின் ஆணைய குழு அதிகாரிகள் அவரை தனியாக அழைத்து சென்றனர். ஓடு பாதையில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தை தாண்டியும் விமானத்தை தாழ்வாகப்பறக்கும்படி இயக்கியது ஏன்? என்று கேள்வி கேட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. திருச்சிக்கு அழைத்து வந்தும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. விசாரணை முடியும் வரை அவருக்கு விமானம் ஓட்டுவதற்கான பணி வாய்ப்பு வழங்கப்படாது என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

திருச்சி விமான நிலையத்தின் சுற்றுச்சுவரில் மோதி விபத்து ஏற்படுத்திய விமானம் மும்பையில் தரை இறக்கப்பட்ட பின்னர் தான் அதன் அடிப்பகுதியிலும் பலத்த சேதம் அடைந்து இருப்பது தெரிய வந்து உள்ளது. மேலும் விமானத்தின் சக்கரங்கள் சுற்று சுவரில் மோதிய போது அதன் மேல் பகுதியில் இருந்த கம்பி வலையின் ஒரு பகுதி தேசிய நெடுஞ்சாலையில் விழுந்து உள்ளது. இன்னொரு பகுதி சக்கரத்தில் சிக்கி இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

Next Story