சீரமைப்பு பணி முறையாக மேற்கொள்ளப்பட்டதா? கொள்ளிடம் அணையில் சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் ஆய்வு


சீரமைப்பு பணி முறையாக மேற்கொள்ளப்பட்டதா? கொள்ளிடம் அணையில் சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் ஆய்வு
x
தினத்தந்தி 13 Oct 2018 11:00 PM GMT (Updated: 13 Oct 2018 6:39 PM GMT)

முக்கொம்பு கொள்ளிடம் அணையில், தற்காலிக சீரமைப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டதா? என சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர்.

ஜீயபுரம்,

திருச்சி-கரூர் மெயின்ரோட்டில் முக்கொம்பில் உள்ள கொள்ளிடம் அணையில் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி இரவு 9 மதகுகள் இடிந்து விழுந்தன. அதைத்தொடர்ந்து உடைந்த இடத்தில் ரூ.95 லட்சம் மதிப்பில் தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மணல் மூட்டைகளை அடுக்கியும், பாறாங்கற்களை கொட்டியும் உடைப்பு சீரமைக்கப்பட்டது.

இந்தநிலையில் முக்கொம்பு கொள்ளிடம் அணைப்பகுதியில் 9 மதகுகள் உடைந்த இடத்தையும், தற்காலிக சீரமைப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்யவும் சென்னை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.) சிவில் என்ஜினீயரிங் துறை பேராசிரியர்கள் பூமிநாதன், பத்மநாபன் ஆகியோர் நேற்று முக்கொம்பு வந்தனர். அங்கு மணல் மூட்டைகள் போட்டு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ள பகுதியையும், அணையின் 45 மதகுகள் அமைந்துள்ள பகுதியையும் ஆய்வு செய்தனர்.

பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொள்ளிடம் அணை சீரமைப்பு பணி முறையாக மேற்கொள்ளப்பட்டதா? அதை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும் எனவும், புதிய தடுப்பணையை எவ்வாறு கட்டுவது? என்பதிலும் சென்னை ஐ.ஐ.டி. சிவில் என்ஜினீயரிங் பிரிவின் முழு ஒத்துழைப்பையும் அரசு கேட்டுள்ளது. அதன் அடிப்படையில், முதல் முறையாக கொள்ளிடம் அணையில் மதகுகள் இடிந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.

மேலும் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக சீரமைத்த இடங்களையும் ஆய்வு செய்தோம். இந்த சீரமைப்பு பணிகளை முதன்மை பொறியாளர் தலைமையிலான குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர். இதற்காக உழைத்தவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என சிபாரிசு செய்வோம். பெரிய மழை வந்தாலோ அல்லது 50 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தாலோ தற்காலிகமாக சீரமைத்த தடுப்பணை உடைந்து விடும் என விவசாயிகள் பயப்படுவது நியாயம் தான். ஏனென்றால், அவர்களுக்கு என்ஜினீயரிங் பணி குறித்து தெரியாது. ஆனால், இனி விவசாயிகளுக்கு தயக்கமோ, பயமோ தேவையில்லை. கடந்த முறை எவ்வளவு தண்ணீர் வந்ததோ அதே அளவுக்கு தண்ணீர் வந்தாலும் சரியாக நிர்வகிக்க முடியும்.

நாளை (திங்கட்கிழமை) சென்னையில் அரசு சார்பில் ஆய்வு கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்தில், கொள்ளிடத்தில் புதிய தடுப்பணையை எவ்வாறு அமைப்பது? என்பது குறித்தும் பேசப்படுகிறது. எங்களது பரிந்துரைகளை பொதுப்பணித்துறை உள்ளிட்ட இதர துறையினர் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story