ஆயுதபூஜை விடுமுறையில் சென்றவர்கள் சென்னை திரும்பினர் பெருங்களத்தூர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல்
சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் தொடர் விடுமுறை முடிந்து நேற்று சென்னை திரும்பினர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஜி.எஸ்.டி. சாலையில் அணிவகுத்ததால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தாம்பரம்,
ஆயுதபூஜை, விஜயதசமியை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை என்பதால் 4 நாட்கள் விடுமுறையை கழிக்க சென்னையில் உள்ள வெளியூர் மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
விடுமுறை கொண்டாட்டங்கள் முடிந்து நேற்று அதிகாலை முதல் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு வாகனங்களில் பொதுமக்கள் வர தொடங்கினர். இதனால் தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் அதிகாலை முதலே போக்குவரத்து நெரிசல் தொடங்கியது.
வாகனங்கள் அணிவகுத்து நின்றன
காலையில் வழக்கமாக செல்லும் கல்லூரி மற்றும் தனியார் பள்ளி பஸ்கள், தனியார் தொழிற்சாலைகளுக்கு செல்லும் பஸ்கள் தென் மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் வந்த ஆம்னி மற்றும் அரசு பஸ்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் செங்கல்பட்டில் இருந்து பெருங்களத்தூர் வரை அணிவகுத்து நின்றன.
சொந்த ஊர்களில் இருந்து வந்து வேலைக்கு செல்லலாம் என வந்த ஏராளமானவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்னைக்கு வர முடியாமல் திணறினர். அதிகாலை முதல் நண்பகல் 12 மணி வரை 6 மணி நேரம் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு வரும் ஜி.எஸ்.டி. சாலை வழியில் பயணம் செய்த பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
பொதுமக்கள் புகார்
வழக்கமாக இது போன்ற தொடர் விடுமுறை முடிந்து மறுநாள் சென்னைக்கு வாகனங்கள் வரும்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆகையால் முன்னெச்சரிக்கையாக கோயம்பேடுக்கு வரும் தனியார் ஆம்னி பஸ்கள், கனரக வாகனங்களை வண்டலூர் மேம்பாலத்தில் இருந்து மீஞ்சூர்– வண்டலூர் வெளிவட்ட சாலை வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்வது வழக்கம். ஆனால் இந்த முறை இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story