ஜோலார்பேட்டை அருகே கார் மோதி போலீஸ்காரர் சாவு


ஜோலார்பேட்டை அருகே கார் மோதி போலீஸ்காரர் சாவு
x
தினத்தந்தி 23 Oct 2018 10:30 PM GMT (Updated: 23 Oct 2018 8:59 PM GMT)

ஜோலார்பேட்டை அருகே கார் மோதி ஆயுதப்படை போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூரைச் சேர்ந்தவர் சுக்காராம். இவருடைய மகன் அசோக்குமார் (வயது 29). இவர் கடந்த 2013-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்து, தற்போது சென்னையில் ஆயுதப்படை போலீசாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சத்தியா. இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது.

நேற்று முன்தினம் அசோக்குமார் விடுமுறையில் ஜோலார்பேட்டைக்கு வந்தார். திருப்பத்தூர் அருகே ஆண்டியப்பனூரில் உள்ள தனது மாமியார் வீட்டில் இருக்கும் மனைவியை அழைத்து வர அசோக்குமார் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

ஜோலார்பேட்டை - திருப்பத்தூர் மெயின்ரோட்டில் பக்கிரிதக்கா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அசோக்குமாருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.

பின்னர் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த வினோத்திடம் (32) போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story