சிறுமிக்கு பாலியல் தொல்லை: 13 வயது சிறுவனுக்கு 2 ஆண்டு சிறை


சிறுமிக்கு பாலியல் தொல்லை: 13 வயது சிறுவனுக்கு 2 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 27 Oct 2018 10:15 PM GMT (Updated: 27 Oct 2018 10:02 PM GMT)

கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 13 வயது சிறுவனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

கோவை,

பீகார் மாநிலத்தை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் தனது குடும்பத்துடன் கோவையில் தங்கி இருந்து ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் பீகாரை சேர்ந்த 13 வயது சிறுவனும் வேலை செய்து வந்தான். அவன், 35 வயது மதிக்கத்தக்க நபரின் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் கோவை மாநகர கிழக்கு பகுதி மகளிர் போலீசார் போக்சோ (குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவனை கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.

இந்த வழக்கு சிறுவர் சீர் திருத்த பள்ளியில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 13 வயது சிறுவனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு தீர்ப்பளித்தார். இதையடுத்து அந்த சிறுவன் அங்குள்ள சீர்திருத்த பள்ளியிலேயே அடைக்கப்பட்டான்.

Next Story