உத்தனப்பள்ளி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்


உத்தனப்பள்ளி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 Nov 2018 12:13 AM GMT (Updated: 2 Nov 2018 12:13 AM GMT)

உத்தனப்பள்ளி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ளது நீலகிரி கிராமம். இந்த கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இக்கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சீராக வினியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் ஊராட்சியில் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் குடிநீர் இன்றி சிரமப்பட்ட நீலகிரி கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் காலிக்குடங்களுடன் கெலமங்கலம் - ராயக்கோட்டை செல்லும் சாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி, உத்தனப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத், ஊராட்சி செயலாளர் சையத் பாஷா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து சென்றார்கள். இதன் காரணமாக கெலமங்கலம் - ராயக்கோட்டை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story