லஞ்ச ஒழிப்பு சோதனை விவகாரம்: திருநாவலூர் இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் பணியிடை நீக்கம்


லஞ்ச ஒழிப்பு சோதனை விவகாரம்: திருநாவலூர் இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 3 Nov 2018 10:45 PM GMT (Updated: 3 Nov 2018 7:11 PM GMT)

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய விவகாரத்தில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

விழுப்புரம், 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் போலீசார் மீது புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 8 மணிநேரம் நடந்த இந்த சோதனையில் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் வீட்டிலும் சோதனை நடந்தது.

இதன் முடிவில் ரூ.2 லட்சத்து 39 ஆயிரம் மற்றும் 107 பட்டாசு பெட்டிகள், ஆண்களுக்கான பேண்ட், சர்ட் 38 ஜோடிகள், பெண்களுக்கான 6 சுடிதார்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். விசாரணையில் இந்த பணம், பரிசு பொருட்களை அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் இருந்து வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இந்த சோதனை விவகாரம் தொடர்பாக திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோரையும், இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்த தனிப்பிரிவு போலீஸ்காரர் பாலாஜி ஆகிய 4 பேரையும் துறை ரீதியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். (முன்வந்த செய்தி 23-ம் பக்கம்)

Next Story