மாவட்டம் முழுவதும் 17 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வு 4,452 மாணவ, மாணவிகள் எழுதினர்


மாவட்டம் முழுவதும் 17 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வு 4,452 மாணவ, மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 4 Nov 2018 10:30 PM GMT (Updated: 4 Nov 2018 9:59 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 17 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை மொத்தம் 4,452 மாணவ, மாணவிகள் எழுதினர்.

நாமக்கல்,

ஆண்டுதோறும் 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு, அதில் சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நேற்று தமிழகம் முழுவதும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் 17 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வானது இரண்டு தாள்களாக நடத்தப்பட்டன. முதல்தாள் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், 2-ம் தாள் காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும் நடத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் இத்தேர்வை எழுத மொத்தம் 5 ஆயிரத்து 94 மாணவ, மாணவிகள் விண்ணப்பம் செய்து இருந்தனர். இவர்களில் 642 பேர் தேர்வு எழுத வரவில்லை. மீதமுள்ள 4 ஆயிரத்து 452 பேர் தேர்வு எழுதினர்.

நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிரீன்பார்க் மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட மையங்களில் நடந்த இந்த தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உஷா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இத்தேர்வில் சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு மேல்நிலைக்கல்வி முடிக்கும் வரை மாதம் தோறும் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story