பன்றிக்காய்ச்சலுக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பலி


பன்றிக்காய்ச்சலுக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பலி
x
தினத்தந்தி 7 Nov 2018 11:00 PM GMT (Updated: 7 Nov 2018 7:50 PM GMT)

பன்றிக்காய்ச்சலுக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரிதாபமாக இறந்தார்.

விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா, அத்திப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா கவுண்டர். இவரது மகன் புகழேந்தி(வயது 35). வக்கீல். இவர் அத்திப்பள்ளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு புகழேந்திக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அங்கும் காய்ச்சல் சரியாகவில்லை. இதையடுத்து புகழேந்திக்கு ரத்த பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து புகழேந்தி மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பன்றி காய்ச்சலுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் புகழேந்தி பரிதாபமாக இறந்தார். பன்றிகாய்ச்சலால் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பலியான சம்பவம் அத்திப்பள்ளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story