கும்மிடிப்பூண்டி அருகே வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு


கும்மிடிப்பூண்டி அருகே வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 8 Nov 2018 10:00 PM GMT (Updated: 8 Nov 2018 7:18 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே பழவியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டது.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த தம்புரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி (வயது 51). பழ வியாபாரி. இவரது மனைவி கிரிஜா (45). வீட்டில் உள்ள 2 தனியறைகளில் செல்வமணியின் மகன்களான பிரசாந்த் (25) மற்றும் நவீன் (22) ஆகியோர் தனித்தனியாக குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். கடந்த 6-ந்தேதி பழவியாபாரத்திற்கு சென்ற செல்வமணி சென்னையிலேயே தங்கி விட்டார்.

சிப்காட் அடுத்து உள்ள முத்து ரெட்டிகண்டிகை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு கிரிஜா, மூத்த மகன் பிரசாந்த் குடும்பத்தினர் சென்று விட்டனர். நவீன் தனது குடும்பத்தினருடன் புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று விட்டார். எனவே வீடு பூட்டப்பட்டு இருந்தது.

திருட்டு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரசாந்த் வீட்டுக்கு வந்தார். வீட்டை திறந்து கொண்டு உளளே சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவுக்கான பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த 3 பீரோக்களில் சாவியை போட்டு திறந்து அதில் இருந்த 14 பவுன் நகை, 1 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.45 ஆயிரம் மர்மநபர்களால் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேற்கண்ட திருட்டு சம்பவம் தொடர்பாக துப்பு துலக்கிட சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்முருகன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் 2 தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு உள்ளது.

Next Story