சூளகிரி அருகே கழுத்தை நெரித்து பெண் படுகொலை கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்


சூளகிரி அருகே கழுத்தை நெரித்து பெண் படுகொலை கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 9 Nov 2018 11:15 PM GMT (Updated: 9 Nov 2018 5:41 PM GMT)

சூளகிரி அருகே கழுத்தை நெரித்து பெண் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கைதான வாலிபர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சூளகிரி,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே மேல்பிக்கனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகண்ணன். இவருடைய மகள் சாரதா (வயது 46). மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் அவர், தந்தையின் பராமரிப்பில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற சாரதா, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை

இந்த நிலையில், மேலுமலை வனப்பகுதியில், யானைகள் நடமாட்டம் உள்ள பிக்கனபள்ளி பகுதியில், பாறை இடுக்கில் ஒரு பெண் பிணமாக கிடப்பதாக சூளகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட சாரதா என்பதும், அவர் கழுத்தை நெரித்து படுகொலை செய்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினார்கள்.

அப்போது தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியை சேர்ந்த கோவிந்தன் என்பவரது மகன் ரமேஷ்(24) என்பவர், சாரதாவுடன் பலமுறை சுற்றித்திரிந்ததாக கிராமமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் ரமேசை பிடித்து துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில், நகைக்காக சாரதாவை கொலை செய்ததாக, ரமேஷ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார், ரமேசை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

நான் பழைய பேப்பர் மற்றும் பிளாஸ்டிக், இரும்பு உள்ளிட்ட பழைய பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வருகிறேன். மேலும், தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை பொறி வைத்து பிடித்து தரும் தொழிலையும் செய்கிறேன். எனக்கு நாகவேணி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். நான் தொழில் நிமித்தமாக அடிக்கடி, மேலுமலை பகுதிக்கு வந்து சென்றபோது, சாரதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை தெரிந்து கொண்டு, சாரதாவை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளேன்.

கடந்த 5-ந்தேதி, காட்டுப் பகுதியில் தனியாக சுற்றித்திரிந்த சாரதாவை சந்தித்து அவர் அணிந்திருந்த நகையை கழற்றி தருமாறு கேட்டேன். ஆனால் அவர் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான், என்னிடம் இருந்த சால்வையால் சாரதாவின் கழுத்தை நெரித்து படு கொலை செய்து, அவர் கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த சுமார் 1 பவுன் நகையை எடுத்துக்கொண்டு, உடலை அங்குள்ள பாறை இடுக்கில் வீசி விட்டு, தப்பியோடி விட்டேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

Next Story