பன்றிக்காய்ச்சல் தொற்றை தடுக்க பொது இடங்களை சுத்தம் செய்ய காலக்கெடு கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தல்


பன்றிக்காய்ச்சல் தொற்றை தடுக்க பொது இடங்களை சுத்தம் செய்ய காலக்கெடு கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 9 Nov 2018 10:45 PM GMT (Updated: 9 Nov 2018 6:09 PM GMT)

பன்றிக்காய்ச்சல் தொற்றை தடுக்க பஸ் நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், வணிக வளாகங்கள் உள்பட பொதுமக்கள் அதிக அளவில் திரளும் பொது இடங்களை ஒரு வார காலத்துக்குள் சுத்தம் செய்ய வேண்டும் என நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தி உள்ளார்.

நாமக்கல், 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உலக சுகாதார நிறுவனம் அளித்து உள்ள வழிகாட்டுதல்படி கை கழுவும் முறைகளை கடைபிடிக்க வேண்டும். பன்றி காய்ச்சல் நோய் தொற்று 80 சதவீதம் கைகளால் பரவுகிறது. மேலும் ஆஸ்பத்திரிகள், பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களில் 5 சதவீதம் லைசால் திரவம் பயன்படுத்தி சுத்தம் செய்தால் பன்றிக்காய்ச்சல் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும்.

எனவே மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, தனியார் பஸ்கள், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், அலுவலகங்கள், வங்கிகள், தபால் நிலையங்கள், பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், திரையரங்குகள், அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களை நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் ஒரு வார காலத்துக்குள் 5 சதவீதம் கிருமி நாசினி திரவம் பயன்படுத்தி தரை தளங்களை சுத்தம் செய்ய வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பிளச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு தூள் ஆகியவற்றை முறையே 1:4 என்ற விகிதத்தில் கலந்து சுற்றுப்புறங்களில் தெளிக்க வேண்டும். மேலும் இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு அதிகாரிகள் தினசரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story