சேலத்தில் பரபரப்பு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்


சேலத்தில் பரபரப்பு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 9 Nov 2018 11:42 PM GMT (Updated: 9 Nov 2018 11:42 PM GMT)

சேலத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏறி வாலிபர் ஒருவர் கீழே குதிக்கப்போவதாக கூறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே டேனிஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 23). இவர், சேலம் புதிய பஸ் நிலையம் அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வேலையில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். பின்னர், பணியாளர்கள் அனைவரும் நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியது. இதனால் வினோத், தனது பங்களிப்பாக ரூ.1 லட்சத்தை தான் வேலை செய்யும் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக அவருக்கு சரிவர சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் வேலையில் இருந்து நின்றுவிடுவதாகவும், தான் முதலீடு செய்த ரூ.1 லட்சத்தை திருப்பி தருமாறு வினோத் கேட்டு வந்தார். ஆனால் பணத்தை தராமல் அந்த நிறுவனத்தினர் கால தாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், நேற்று மதியம் வினோத், மீண்டும் அந்த நிறுவனத்திற்கு சென்று தனது பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அங்கு இருந்தவர்கள், இப்போது பணம் எதுவும் தரமுடியாது என்று கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த வினோத், திடீரென அந்த நிறுவனம் செயல்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏறி கீழே குதிக்கப்போவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, அங்கு பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து, அவரை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினர். ஆனால் பணம் கொடுக்கும் வரை கீழே இறங்கமாட்டேன் எனக்கூறி வினோத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்த அழகாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்கி வருமாறு கூறினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசி பணத்தை வாங்கி தருவதாக போலீசார் உறுதியளித்ததின்பேரில் வினோத் போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கி வந்தார்.


Next Story