பழைய ரேஷன் அட்டைக்கு பதிலாக 1 கோடியே 97 லட்சம் “ஸ்மார்ட் கார்டுகள்” அமைச்சர் தகவல்


பழைய ரேஷன் அட்டைக்கு பதிலாக 1 கோடியே 97 லட்சம் “ஸ்மார்ட் கார்டுகள்” அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 10 Nov 2018 10:45 PM GMT (Updated: 10 Nov 2018 7:27 PM GMT)

தமிழகத்தில் பழைய ரேஷன் அட்டைக்கு பதிலாக 1 கோடியே 97 லட்சம் “ஸ்மார்ட் கார்டுகள்” வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறினார்.

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓவர்ச்சேரி கிராமத்தில் பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். மன்னார்குடி உதவி கலெக்டர் பத்மாவதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்குனர் தெய்வநாயகி, மாவட்ட வழங்கல் அதிகாரி சேகர், கூத்தாநல்லூர் தாசில்தார் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு பொது வினியோக திட்டம் தொடர்பான கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு, தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இதையடுத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு “ஸ்மார்ட் கார்டுகளை” வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பொது வினியோக திட்டத்தின்கீழ் உணவு பொருட்களை கிடங்குகளுக்கு கொண்டு சென்று, அவை அந்தந்த ரேஷன் கடைகளுக்கு எடுத்து செல்லும் பணிகளை ரூ.330 கோடி செலவில் கணினிமயமாக்கியவர் ஜெயலலிதா. அவரால் உருவாக்கப்பட்டது தான் இந்த பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம். அந்த முகாம் தமிழக அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த அரசின் நோக்கம் சிறப்பான திட்டங்கள் மக்களுக்காகத்தான். மற்றவர்களுக்காக அல்ல என்பது தான். தமிழகத்தில் பழைய ரேஷன் அட்டைகளுக்கு பதிலாக 1 கோடியே 97 லட்சம் “ஸ்மார்ட் கார்டுகள்” வழங்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அமைச்சர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தினம் தினம் பொய் சொல்லி தினகரன் தன்னை விளம்பரப்படுத்தி கொள்கிறார். அவர் சொல்வது எல்லாம் வேத வாக்கு அல்ல. சர்கார் படத்தில் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை கொச்சை படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் தியேட்டர்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு ஆகியோரின் சந்திப்பு நாடாளுமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அ.தி.மு.க. என்கிற இரும்பு கோட்டையை எவராலும் அசைக்க முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அனைத்து தொகுதியிலும் அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story