கந்தசஷ்டி விழாவையொட்டி சேலம் முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


கந்தசஷ்டி விழாவையொட்டி சேலம் முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 13 Nov 2018 11:37 PM GMT (Updated: 13 Nov 2018 11:37 PM GMT)

கந்தசஷ்டி விழாவையொட்டி சேலம் முருகன் கோவில்களில் நேற்று மாலை சூரசம்ஹாரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம்,

சேலம் ஜாகீர் அம்மாபாளைம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் கந்தசஷ்டி விழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கோமாதா பூஜையும், அதைத்தொடர்ந்து 36 முறை சஷ்டி பாராயணமும் நடந்தது.

மதியம் 12 மணிக்கு சாமிக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு பூஜை நடந்தது. பின்னர் மாலை 4 மணிக்கு, நவவீரர் விஜயம், வீரபாகு தூது, வேல்படை பக்தர்கள், நவவீரர்கள் சூழ ஆட்டுக்கிடா வாகனத்தில் சண்முகநாதர் புறப்பாடு ஆகியவை நடந்தது.

இதையடுத்து முருகன், சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு சாமிக்கு செந்தூர்வேலன் அலங்காரம் செய்யப்பட்டு 108 தங்கமலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. இன்று(புதன்கிழமை) திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜை நடத்தப்பட்டு வந்தது. நேற்று மாலையில் சூரசம்ஹாரம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

கந்தசஷ்டி விழாவையொட்டி சேலம் பெரமனூர் கந்தசாமி கோவிலில் நேற்று காலை 9 மணிக்கு 36 முறை பாராயணம் நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேலம் சீலநாயக்கன்பட்டி ஊத்துமலையில் உள்ள முருகன் கோவிலிலும் கந்தசஷ்டி விழாவையொட்டி முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.

சேலம் அழகாபுரம் முருகன் கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் சேலம் உடையாப்பட்டி கந்தாஸ்ரமத்தில் வீற்றிருக்கும் பாலதண்டாயுதபாணி கோவிலில் விசேஷ பூஜை நடைபெற்றது. சேலம் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள ஆறுபடையப்பன் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story