ஐகோர்ட்டு முன்பாக முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


ஐகோர்ட்டு முன்பாக முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Nov 2018 11:15 PM GMT (Updated: 14 Nov 2018 8:51 PM GMT)

சென்னை ஐகோர்ட்டு முன்பாக முதியவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு வழக்கம்போல நேற்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது அதன் நுழைவாயிலில் முதியவர் ஒருவர், தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடிச்சென்று அவரை தடுத்து நிறுத்தினர். அவரது கையில் இருந்த தீப்பெட்டியை பறித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், அவரை அந்தப் பகுதியில் உள்ள பொது கழிப்பறைக்கு அழைத்துச்சென்று குளிக்க வைத்தனர்.

அதையடுத்து அவரை வடக்கு கடற்கரை சாலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர், சேலம் மாவட்டம், எஸ்.பாப்பாரப்பட்டியை சேர்ந்த பச்சியப்பன் என்பது தெரியவந்தது. பூர்வீக சொத்து தொடர்பான வழக்கில், தனக்கு அநீதி இழைக்கப்பட்டதால் துண்டு பிரசுரம் வினியோகித்து விட்டு, தீக்குளிக்க முயற்சித்ததாக அவர் கூறினார். அவரை, தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக்குழு அலுவலகத்துக்கு போலீசார் அழைத்துச்சென்று, புகார் மனு கொடுக்க வைத்தனர். அதைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், அதுகுறித்து விசாரிப்பதாக கூறினர். அதைத் தொடர்ந்து அவருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

தீக்குளிக்க முயற்சிப்பதற்கு முன்பு பச்சியப்பன் வினியோகித்த துண்டு பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:-

பூர்வீக சொத்து தொடர்பாக கடந்த 1998-ம் ஆண்டு கீழ் கோர்ட்டில் நானும், என் சகோதரனும் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கின் முக்கிய ஆவணங்களை கோர்ட்டு ஊழியர் எடுத்து சென்றுவிட்டார். அப்போதைய சட்ட அமைச்சர் ஆலடி அருணாவுக்கு புகார் அனுப்பியதன் விளைவாக, அந்த ஆவணங்கள் 2 ஆண்டுகளுக்கு பின் கோர்ட்டுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து என் வழக்கை கீழ் கோர்ட்டு நீதிபதி தள்ளுபடி செய் தார். இந்த வழக்கில் எனக்கு எதிராக நடந்த முறைகேடுகள் குறித்து ஐகோர்ட்டுக்கு பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து ஐகோர்ட்டு முன்பு உயிரை துறக்க அனுமதி கேட்டு ஜனாதிபதிக்கு 2014-ம் ஆண்டு மனு அனுப்பினேன். எனக்கு நீதி வழங்கும் பொருட்டு, என் கோரிக்கை மனுவை மத்திய அரசு மூலம் சென்னை ஐகோர்ட்டுக்கு ஜனாதிபதி அனுப்பிவைத்தார்.

அதன்பின்னரும் எந்த தகவலும் இல்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ஐகோர்ட்டில் மனு செய்தபோது, என் வழக்கை தள்ளுபடி செய்த கீழ்கோர்ட்டு நீதிபதியிடம் விசாரணை நடப்பதாக பதில் வந்தது.

அதன்பின்னர் இதுவரை எனக்கு உரிமை நீதி கிடைக்கவில்லை. நான் என் குடும்பத்தை மீளாத வறுமையில் தள்ளிவிட்டேன். எனவே, என் உயிரை மாய்த்துக்கொள்கிறேன். நதியின் கண்கள் அடைக்கப்பட்டால் ஊற்றுகண் உண்டு. நீதியின் கண்கள் அடைக்கப்பட்டால் மாற்றுக்கண் இல்லை.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story