அரசு பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்


அரசு பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 15 Nov 2018 10:15 PM GMT (Updated: 15 Nov 2018 3:58 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வெங்கடாஜலம் முன்னிலை வகித்தார். இதில் நேருவின் படத்திற்கு ஆசிரியர்கள், மாணவிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியினையொட்டி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

தேன்கனிக்கோட்டை அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லில்லிமார்கரெட் சோபியா தலைமை தாங்கினார். இதையொட்டி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, நடனம், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மத்தூர் ராஜீவ்நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பாபு கலந்து கொண்டு பேசினார். இதில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி உதவி ஆசிரியர் பாலாஜி நன்றி கூறினார்.

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாதப்பன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் பற்குணன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையொட்டி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னதாக உதவி ஆசிரியர் லட்சுமி வரவேற்றார். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் சிவப்பிரகாசம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கெலமங்கலம் ஒன்றியம் அக்கொண்டப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் சாதப்பா தலைமை தாங்கி பேசினார். விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியர்கள் பாலசுப்பிரமணி, செல்வகவிதா, லதா, நாகலதா, பாரதி, மஞ்சுளா, பிரேமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story