ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு மேலும் 20 யானைகள் வந்தன விவசாயிகள் கவலை


ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு மேலும் 20 யானைகள் வந்தன விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 18 Nov 2018 10:15 PM GMT (Updated: 18 Nov 2018 6:06 PM GMT)

ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு மேலும் 20 காட்டு யானைகள் வந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தேன்கனிக்கோட்டை,

ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டு பயிர்களை நாசம் செய்த யானைகளை வனத்துறையினர் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டினார்கள். அங்கு பேவநத்தம், சிவநஞ்சுண்டேஸ்வரன் மலைப்பகுதியில் முகாமிட்டிருந்த 50 காட்டு யானைகளை தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் தலைமையிலான வனக்குழுவினர் மரக்கட்டா காட்டிற்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அந்த யானைகள் பல பிரிவுகளாக பிரிந்து கோட்டட்டி, லட்சுமிபுரம், புதூர், காடுலக்கசந்திரம் பகுதியில் உள்ள ராகி, தக்காளி, சோள பயிர்களை நாசம் செய்தன. பின்னர் அந்த யானைகள் பேவநத்தம் காட்டிற்கே மீண்டும் திரும்பி வந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் கர்நாடக வனப்பகுதியில் இருந்து மேலும் 20 காட்டு யானைகள் ஜவளகிரி வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் வந்துள்ளன.

தற்போது தேன்கனிக்கோட்டையை சுற்றி 100-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பேவநத்தம் காட்டில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டாலும் அவை மீண்டும் அதே காட்டிற்கு வருவது தொடர்ந்து வருகின்றன.

Next Story