மரியாதை தராததால் ஆத்திரம்: பல்கலைக்கழக மாணவர் மீது தாக்குதல் ஆந்திர மாணவர்கள் 4 பேர் கைது


மரியாதை தராததால் ஆத்திரம்: பல்கலைக்கழக மாணவர் மீது தாக்குதல் ஆந்திர மாணவர்கள் 4 பேர் கைது
x
தினத்தந்தி 18 Nov 2018 10:45 PM GMT (Updated: 18 Nov 2018 7:02 PM GMT)

சீனியருக்கு மரியாதை தரவில்லை என கூறி ஜூனியர் மாணவரை பெல்டால் தாக்கிய 4 ஆந்திர மாநில மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம்,

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் நவீன (வயது 19). சென்னையை அடுத்த சேலையூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார். அதே பல்கலைக் கழகத்தில் ஆந்திராவை சேர்ந்த மாணவர்கள் சிலர் பி.டெக். இறுதி ஆண்டு படித்து வந்தனர்.

நவீன், தங்கள் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், அவரிடம் “சீனியர் மாணவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும், எங்களை பார்க்கும்போது வணக்கம் சொல்ல வேண்டும்” என மிரட்டினர். ஆனால் நவீன் அவர்களை கண்டு கொள்ளாமல் இருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சீனியர் மாணவர் கள், மாடம்பாக்கம் புவனேஸ்வரி நகரில் தாங்கள் தங்கி இருந்த அறைக்கு அழைத்து சென்று நவீனை பெல்டால் அடித்து துன்புறுத்தினர். காயமடைந்த நவீன் இதுதொடர்பாக சேலையூர் போலீசில் புகார் செய்தார்.

சேலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பா இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நவீனை தாக்கிய ஆந்திராவை சேர்ந்த சீனியர் மாணவர்கள் பிரசாந்த்(21) அமர்நாத் ரெட்டி(21) அரிக்குமார்(21), வெங்கடேஷ்(21) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

Next Story