‘கஜா’ புயல் ஏற்படுத்திய நீங்காத துயரம்: தென்னம் “பிள்ளைகளை” இழந்த மக்கள் வாழ்வாதாரம் அழிந்து விட்டதாக கதறல்


‘கஜா’ புயல் ஏற்படுத்திய நீங்காத துயரம்: தென்னம் “பிள்ளைகளை” இழந்த மக்கள் வாழ்வாதாரம் அழிந்து விட்டதாக கதறல்
x
தினத்தந்தி 19 Nov 2018 10:45 PM GMT (Updated: 19 Nov 2018 9:41 PM GMT)

மன்னார்குடி சுற்று வட்டாரத்தில் மக்கள் தங்கள் தென்னம் “பிள்ளைகளை” இழந்து தவிக்கிறார்கள். வாழ்வாதாரமே அழிந்து விட்டதாக அவர்கள் கதறுகிறார்கள். ‘கஜா’ புயல் நீங்காத துயரத்தை ஏற்படுத்தி சென்று விட்டது.

சுந்தரக்கோட்டை,

கரையை கடக்கும் வரை சலனமே இல்லாமல் இருந்த ‘கஜா’ புயல், கரையை கடக்க தொடங்கியபோது திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை நிர்மூலமாக்கி சென்றிருக்கிறது. விவசாயிகள் நிறைந்த இப்பகுதியில் ஏராளமானவர்கள் தென்னை சாகுபடி செய்து இருந்தனர். தென்னை மரங்களை கிராமங் களில் தென்னம் “பிள்ளைகள்” என்றே அழைப்பார்கள்.

ஒரு மரம் காய்ப்பதற்கு 7 ஆண்டுகள் வரை ஆகும் என்பதாலும், காய்க்க தொடங்கி விட்டதால் பல ஆண்டுகள் வருமானம் தந்து குடும்பத்தை செழிக்க செய்யும் என்பதாலும் ஒவ்வொரு மரத்தையும் மக்கள் தங்கள் பிள்ளைகள் போல வளர்த்து வந்தனர். இவ்வாறு வளர்க்கப்பட்ட தென்னம் பிள்ளைகளை கஜா புயல் ஒரே நாளில் சாய்த்து நீங்காத துயரத்தை ஏற்படுத்தி சென்று விட்டது.

மன்னார்குடி அருகே உள்ள உள்ளிக்கோட்டை, மகாதேவபட்டினம், திருப்பாலக்குடி, தளிக்கோட்டை, கண்டிதம்பேட்டை, கூப்பாச்சிக்கோட்டை, பரவாக்கோட்டை, ராதாநரசிம்மபுரம், பைங்காநாடு உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக தென்னந்தோப்புகள் இருந்தன. இவற்றை புயல் முற்றிலுமாக அழித்து சென்றிருக்கிறது.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்து விட்டதாக தென்னை விவசாயிகள் கண்ணீருடன் கூறுகின்றனர். இதுதொடர்பாக மன்னார்குடி பகுதி தென்னை விவசாயிகள் கூறியதாவது:-

நெல் விவசாயத்தை போல தென்னை விவசாயத்தில் இழப்பை கணக்கிடுவது கடினம். ஏனெனில் ஒவ்வொரு மரமும் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான தேங்காங்களை குலை தள்ளும்.

ஒரு லட்சத்துக்கும் அதிகமான தென்னை மரங்களை மன்னார்குடி பகுதி இழந்து இருக்கிறது. இனி மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும். பிள்ளைகளை படிக்க வைப்பதற்கு, திருமணம் செய்து வைப்பதற்கு, குடும்ப செலவுகளுக்கு என தென்னை மரங்கள் தான் எங்களுடைய வாழ்வாதாரம். அது தற்போது அழிந்து விட்டதால் என்ன செய்வதென தெரியாமல் தவித்து வருகிறோம்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

புயலில் சிக்கி மன்னார்குடி பகுதியில் மட்டும் ஓட்டு வீடுகள், கூரை வீடுகள் என 10 ஆயிரம் வீடுகள் சேதமடைந்து உள்ளன. தென்னை மரங்கள், கால்நடைகள், வீடுகள் என மொத்த சேத மதிப்பு ரூ.500 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

Next Story