ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 7-ந்தேதி திருநெடுந்தாண்டக த்துடன் தொடங்குகிறது


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 7-ந்தேதி திருநெடுந்தாண்டக த்துடன் தொடங்குகிறது
x
தினத்தந்தி 2 Dec 2018 10:30 PM GMT (Updated: 2 Dec 2018 7:41 PM GMT)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 7-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது.

ஸ்ரீரங்கம்,

பூலோக வைகுண்டம், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் எல்லாம் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி திருவிழாவாகும். பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு சிகர நிகழ்ச்சியாகும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு கோவில் மூலஸ்தானத்தில் ஆரம்பமாகும் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சி தொடர்ந்து சந்தனு மண்டபத்தில் நடைபெறும். அப்போது அரையர்கள் அபிநயம் வியாக்யானத்துடன் பாடல்களை பாட நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். மறு நாள் (சனிக்கிழமை) பகல்பத்து உற்சவத்தின் முதல் நாள் நிகழ்ச்சியாகும். அன்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி 7.45 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருள்வார். பகல் பத்து இரண்டாம் நாளில் இருந்து நம்பெருமாள் காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து வெவ்வேறு சிறப்பு அலங்காரத்தில் புறப்படுவார்.

18-ந்தேதி சொர்க்க வாசல் திறப்பு

பகல் பத்து உற்சவத்தின் 10-வது நாளான டிசம்பர் 17-ந்தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி அளிப்பார். மறு நாள் (18-ந்தேதி) பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்படும். அன்று அதிகாலை 4.15 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்க வாசலை கடந்து திருக்கொட்டகையில் பக்தர்கள் மத்தியில் எழுந்தருள்வார். அன்று முதல் பத்து ( ராப்பத்து) நாட்கள் தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். 28-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறும்.

வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம் முதல் முடிவு வரை மூலவர் நம்பெருமாள் ரத்தின அங்கியில் சேவை சாதிப்பார். ரத்தின அங்கியில் மூலவர் பெருமாளை சேவிப்பதற்காகவும், உற்சவர் நம்பெருமாளை தரிசனம் செய்வதற்கும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வந்து செல்வார்கள்.

ஆயிரங்கால் மண்டபத்தில் அலங்காரம்

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் புதுப்பொலிவு பெற்று வருகிறது. ராப்பத்து உற்சவத்தின்போது நம்பெருமாள் எழுந்தருளும் ஆயிரங்கால் மண்டபத்தின் உள்பகுதி மற்றும் தூண்களில் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. வண்ண மின் விளக்குகளும் போடப்பட்டு உள்ளன. ஆயிரங்கால் மண்டபத்தின் முன் பகுதியில் உள்ள மணல் வெளியில் பந்தல் அமைக்கும் பணி முடிவடைந்து உள்ளது. இது தவிர முக்கிய கோபுரங்களில் எல்லாம் மின் விளக்குகளால் அலங்கரிக்கும் பணியும் நடந்து வருகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன் தலைமையில் அறங்காவலர்கள், இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

Next Story