அரசியல் ஆதாயத்திற்காக பிரதமருக்கு கருப்புக்கொடி: வைகோவின் சவாலை ஏற்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


அரசியல் ஆதாயத்திற்காக பிரதமருக்கு கருப்புக்கொடி: வைகோவின் சவாலை ஏற்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 4 Dec 2018 10:00 PM GMT (Updated: 5 Dec 2018 12:05 AM GMT)

அரசியல் ஆதாயத்திற்காக பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என்று கூறும் வைகோவின் சவாலை ஏற்க தயார் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை, 

வைகோ ஆரம்பத்தில் தி.மு.க.வில் இருந்த போது தனக்கு எதிராக மிகப்பெரிய சதிச்செயல் நடத்தப் பட்டதை கண்டித்து அதில் இருந்து வெளியேறினார். அந்த சதிச்செயல் செய்தவர்களை அரசியலில் இருந்து ஓய்வு பெற வைக்க சபதம் புரிந்து, தமிழகத்தை காப்பாற்ற போகிறேன் என ம.தி.மு.க.வை உருவாக்கினார். ஆனால் இன்று என்ன நிலை உருவாகி உள்ளது என அவருக்குத்தான் தெரியும்.

வைகோ தனது நிலைப்பாட்டில் இருந்து மாறி எந்த தீய சக்திக்கு எதிராக போராடுவேன் என வெளியே வந்தாரோ, அந்த தீய சக்திக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் களத்தில் இறங்கி உள்ளார். இதனால் வைகோ மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியதாகவும், கேலிக்குரியதாகவும் மாறி உள்ளது.

அரசியல் ரீதியான ஆதாயம் தேடுவதற்காக பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என்று வைகோ கூறி உள்ளார். எதுவாக இருந்தாலும் இந்த சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். பிரதமர் தமிழகம் வருவார், அனைத்து இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்வார்.

தமிழகத்திற்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் பிரதமர் தருவார். எந்தவித போராட்டங் களையும் எதிர்கொள்ள நாங்கள் தயார். தேவையற்ற முறையில் வார்த்தைகளை கூற வேண்டாம் என நான் வேண்டுகோள் வைக்கிறேன். யாரையோ திருப்திப்படுத்த, யாரையாவது அவமானப்படுத்த வேண்டாம். அது தமிழகத்தில் நடக்காது. அவருடைய பேச்சு ம.தி.மு.க. தலைவர்களை தலைகுனிய வைத்துள்ளது.

எப்படியாவது தி.மு.க.வுடன் கூட்டணியில் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு ம.தி.மு.க. தள் ளப்பட்டு உள்ளது. வேண்டா விருந்தாளியாக தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. உள்ளது. அவர் யாரை முதல்வராக்க வேண்டும் என நினைக்கிறாரோ அவரை திருப்திப்படுத்த நினைக்கிறார். தி.மு.க.வில் உள்ளவர்கள் ம.தி.மு.க.வினரை ஏளனமாக பார்க்கின்றனர்.

மேகதாதுவில் அணை கட்ட ஆய்வறிக்கைக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத் திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படும் வகையில் அந்த ஆய்வறிக்கை அமையாது என்று நான் நம்புகிறேன். மேகதாது அணை கட்ட முழு எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டு இருக்கிறோம்.

கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மத்திய குழுவின் அறிக்கை இதுவரை கொடுக்கப்பட வில்லை. கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். மத்திய குழுவின் அறிக்கை வந்த உடன் கூடுதல் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story