கஜா புயலால் பயிர்கள் சேதம்: வேளாண்மை தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு


கஜா புயலால் பயிர்கள் சேதம்: வேளாண்மை தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 5 Dec 2018 11:00 PM GMT (Updated: 5 Dec 2018 7:19 PM GMT)

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் சேதமடைந்த பயிர்களை வேளாண்மை தொழில் நுட்ப குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களின் சேதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் ஒருங்கிணைந்த தோட்டக்கலை இயக்கக இணை செயலாளர் தினேஷ்குமார், தென்னை வளர்ச்சி வாரிய இயக்குனர் பாலசவுந்தரி, தோட்டக்கலைத்துறை ஆணையர் மூர்த்தி, தேசிய வாழை ஆராய்ச்சி நிலைய தலைவர் உமா ஆகியோரை கொண்ட வேளாண்மை தொழில் நுட்ப குழுவினர் வந்தனர். இந்த குழுவினர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் சுப்பையன், நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து நாகை மாவட்டத்தில் கஜா புயலால் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கோவில்பத்து, வானவன்மகாதேவி, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி உள்ளிட்ட கிராமங்களில் புயலால் சேதமடைந்துள்ள பயிர்களின் விவரம் மற்றும் சேதத்தின் அளவு குறித்து கிராமம் வாரியாக கணக்கெடுத்து கணினியில் பதிவேற்றம் செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆய்வின் போது வேளாண்மைத்துறை இணை இயக்குநர் நாராயணசாமி, மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story