கஜா புயலால் ஏற்பட்ட சேத விவரங்களை கணினியில் பதிவேற்றும் பணி 75 ஆசிரியர்கள் பங்கேற்பு


கஜா புயலால் ஏற்பட்ட சேத விவரங்களை கணினியில் பதிவேற்றும் பணி 75 ஆசிரியர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 5 Dec 2018 10:45 PM GMT (Updated: 5 Dec 2018 7:49 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேத விவரங்களை கணினியில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 75 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தஞ்சாவூர்,

வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் உருவானது. இந்த புயலுக்கு கஜா என பெயரிடப்பட்டது. இந்த புயல் நாகை மாவட்டம் வேதாரண்யத்துக்கும், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்துக்கும் இடையே கரையை கடந்தது. அப்போது பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

இந்த காற்றினால் தஞ்சை மாவட்டத்தில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன. தென்னை, மா, பலா, தேக்கு, அரசமரம், ஆலமரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களும் வேரோடு சாய்ந்தன. மேலும் நெல், வாழை, மக்காச்சோளம், எலுமிச்சை, வெற்றிலை கொடிக்கால் உள்ளிட்ட பயிர்களும் சேதம் அடைந்தன.

இந்த புயலினால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். மேலும் வீடுகளை இழந்த பொதுமக்கள் 20 ஆயிரம் பேர் இன்னும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாதிப்படைந்த தென்னை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் குறித்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையினரும், சேதமடைந்த வீடுகள், கட்டிடங்கள் குறித்து வருவாய்த்துறையினரும் கணக்கெடுத்து வருகிறார்கள். இந்த கணக்கெடுப்பு பணி கிராம ஊராட்சிகள் வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையடுத்து சேதமடைந்த விவரங்கள் குறித்து மத்திய, மாநில அரசுக்கு அறிக்கை அளிக்கும் வகையில் கணக்கெடுப்பு விவரங்களை கணினியில் பதிவேற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் மற்றும், தனியார் பள்ளியில் இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் கணக்கெடுப்பு அலுவலர்கள், வேளாண்மை உதவி இயக்குனர்கள் மற்றும் 75-க்கும் மேற்பட்ட கணினி ஆசிரியர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் விவசாயிகளின் பெயர், முகவரி, ஆதார் எண், வங்கி கணக்கு, மரங்கள் மற்றும் பயிர்களின் பாதிப்புகள் விவரம், இதர பாதிப்புகள் ஆகியவை குறித்து கணினியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த தகவல்கள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று அதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story