முன்கூட்டியே விடுதலை தொடர்பாக ‘பேரறிவாளன் கேட்கும் தகவல்களை வழங்கக்கூடாது’ புனே சிறைக்கு சஞ்சய் தத் கடிதம்


முன்கூட்டியே விடுதலை தொடர்பாக ‘பேரறிவாளன் கேட்கும் தகவல்களை வழங்கக்கூடாது’ புனே சிறைக்கு சஞ்சய் தத் கடிதம்
x
தினத்தந்தி 5 Dec 2018 11:00 PM GMT (Updated: 5 Dec 2018 10:38 PM GMT)

முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக பேரறிவாளன் கேட்கும் தகவல்களை வழங்கக்கூடாது என புனே சிறைக்கு சஞ்சய் தத் கடிதம் எழுதியிருக்கிறார்.

மும்பை, 

முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக பேரறிவாளன் கேட்கும் தகவல்களை வழங்கக்கூடாது என புனே சிறைக்கு சஞ்சய் தத் கடிதம் எழுதியிருக்கிறார்.

கடிதம் அனுப்பினார்

மும்பை குண்டுவெடிப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு ஆயுத தடைச்சட்டத்தின் கீழ் 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை 5 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டு குறைத்தது. மும்பை எரவாடா சிறையில் அடைக்கப்பட்ட அவர், தண்டனை காலம் முடிவதற்கு முன்னே விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் கைதிகளில் ஒருவரான பேரறிவாளன், எந்த அடிப்படையில் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்? என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் புனே எரவாடா சிறை நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பினார்.

தகவல்கள் அளிக்கக்கூடாது

இதில் அவருக்கு தகவல்கள் அளிக்கப்படாததை தொடர்ந்து மேல்முறையீடும் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு புனே தகவல் ஆணையம் முன்பு நேற்று விசாரணை நடந்தது. அப்போது, தனது விடுதலை தொடர்பான தகவல்களை பேரறிவாளனுக்கு அளிக்கக்கூடாது என எரவாடா சிறை நிர்வாகத்துக்கு சஞ்சய் தத் கடிதம் எழுதியிருப்பதாக கூறிய சிறை அதிகாரி, அந்த கடிதத்தையும் சமர்ப்பித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பேரறிவாளன் தரப்பு வக்கீல் நிலே‌ஷ் உகே, ஒரு தண்டனை கைதிதான் மாநில அரசை வழிநடத்துவாரா? என கேள்வி எழுப்பினார். இருதரப்பு வாதமும் முடிந்தபின் இந்த வழக்கை தகவல் ஆணையர் ஒத்திவைத்தார்.

Next Story