கொடைக்கானலில் சாரல் மழை: மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு


கொடைக்கானலில் சாரல் மழை: மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 5 Dec 2018 10:00 PM GMT (Updated: 6 Dec 2018 12:01 AM GMT)

கொடைக்கானலில் சாரல் மழை பெய்தது. கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் 2 மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தன.

கொடைக்கானல், 

கொடைக்கானலில் நேற்று அதிகாலை முதல் நண்பகல் 12 மணி வரை விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. இந்நிலையில் பகல் 11 மணி அளவில் கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் டைகர் சோலை என்ற இடத்தின் அருகே அடுத்தடுத்து 2 மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தன. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை அடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரங்களை எந்திரங்கள் கொண்டு வெட்டி அகற்றினர். தகவலறிந்த கொடைக்கானல் நகர அ.தி.மு.க. செயலாளர் ஸ்ரீதர், அவைத்தலைவர் ஜான்தாமஸ் ஆகியோர் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினர். பின்னர் அந்த பகுதியில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

இதேபோல் பெருமாள்மலை பகுதியில் மின்சார கம்பிகள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின் வினியோகம் தடைபட்டது. இதனை அடுத்து பொதுமக்களும், வனத்துறையினரும் சேர்ந்து மரக்கிளைகளை அகற்றினர். பின்னர் அப் பகுதிக்கு மின் வினியோகம் சீரானது. இதற்கிடையே கொடைக் கானல் பகுதியில் உள்ள வீடுகளின் அருகே ஆபத்தை விளைவிக்கும் வகையில் மரங்கள் இருந்தால், தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தால் அதனை அகற்ற துரித நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story