கூடுவாஞ்சேரி அருகே தனியார் பஸ்சை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


கூடுவாஞ்சேரி அருகே தனியார் பஸ்சை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2018 10:45 PM GMT (Updated: 7 Dec 2018 5:10 PM GMT)

கூடுவாஞ்சேரி அருகே தனியார் பஸ்சை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வண்டலூர்,

கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் இருந்து கோவிந்தராஜபுரம் 3-வது தெரு வழியாக ஏ.எல்.எஸ் அவென்யூ மற்றும் ஓம் சக்தி நகர் வழியாக காயரம்பேடு வரை பஸ் இயக்கப்பட வேண்டும் என கோவிந்தராஜபுரம் பகுதி பொது மக்கள் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவுபடி கடந்த 15.8.18 அன்று ஒரு நாள் மட்டும் ஒரு முறை மட்டுமே கோவிந்தராஜபுரம் வழியாக தனியார் மினி பஸ் இயக்கப்பட்டு அடுத்த நாளில் இருந்து நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

இது குறித்து கோவிந்தராஜபுரம் பொதுமக்கள் முதல்- அமைச்சர் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனுவை அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிந்தராஜபுரம் குடியிருப்பு நல சங்க தலைவர் கோகுலநாதன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் நலசங்க நிர்வாகிகள் திடீரென காயரம்பேடு நோக்கி சென்ற அந்த தனியார் மினி பஸ்சை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அறிந்த தகவல் அறிந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் கருப்பையா, சரவணன், மற்றும் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் தினசரி காலை, மதியம், மாலை ஆகிய 3 வேளைகளியில் பஸ்சை இயக்கிட தனியார் பஸ் நிறுவனத்தின் பிரதிநிதி எழுத்து மூலம் எழுதி கொடுத்தார்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் கலைந்து சென்றனர். இதன் பின்னர் நேற்று முன் தினம் இரவு முதல் கோவிந்தராஜபுரம் பகுதிக்கு மினி பஸ் இயக்கும் பணி தொடங்கியது இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பொது மக்கள் பஸ்சை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் கூடுவாஞ்சேரி நெல்லிகுப்பம் சாலையில் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

Next Story