பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; டிரைவர் பலி


பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; டிரைவர் பலி
x
தினத்தந்தி 7 Dec 2018 10:00 PM GMT (Updated: 7 Dec 2018 6:43 PM GMT)

பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் டிரைவர் பலியானார். மேலும், வாலிபர் படுகாயம் அடைந்தார்.

பேராவூரணி,

பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட கூப்புளிக்காடு பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது32). டிரைவர். இவர் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு அறந்தாங்கியில் இருந்து பேராவூரணிக்கு வந்து கொண்டிருந்தார். புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்(18). இவர் மோட்டார் சைக்கிளில் பேராவூரணியில் இருந்து மேற்பனைக்காட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது சித்தாதிக்காடு அருகே வந்த போது மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்டன.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு 2 பேரையும் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நீலகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ராஜ்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த நீலகண்டனுக்கு திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர்.


Next Story