வாலிபரின் கழுத்து அறுப்பு; நண்பர் கைது 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


வாலிபரின் கழுத்து அறுப்பு; நண்பர் கைது 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 8 Dec 2018 10:45 PM GMT (Updated: 8 Dec 2018 9:32 PM GMT)

புளியந்தோப்பில் ‘பேப்பர்’ பொறுக்குவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக வாலிபரின் கழுத்தை அவரது நண்பர்கள் அறுத்தனர்.

திரு.வி.க. நகர்,

சென்னை புளியந்தோப்பு குமாரசாமி ராஜாபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் சுருதி (வயது 28). நேற்று முன்தினம் நள்ளிரவு இவரை 3 பேர் கொண்ட கும்பல் பிளேடால் கழுத்தில் அறுத்தனர். இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சுருதியை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பேசின்பிரிட்ஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுருதியிடம் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் புளியந்தோப்பு காந்திநகர் சந்திப்பு அருகே பதுங்கி இருந்த புளியந்தோப்பு ஆசீர்வாதபுரம் 3-வது தெருவை சேர்ந்த நரேஷ் (28) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

நண்பர் கைது

விசாரணையில், சுருதியும், அவரது நண்பர்களான நரேஷ், ஸ்ரீதர், வெங்கடேஷ் ஆகிய 4 பேரும் புளியந்தோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பேப்பர்களை பொறுக்கி கடையில் போட்டு பணம் சம்பாதித்து வந்தனர். ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை சுருதி மட்டும் தனியாக சென்று பேப்பர்களை பொறுக்கி கடையில் போட்டு பணம் சம்பாதித்துள்ளார். இதனால் மற்ற 3 பேரும் ஆத்திரம் அடைந்தனர்.

பின்னர் இரவு 4 பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தினர். அப்போது இதுதொடர்பாக சுருதிக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் 3 பேரும் சேர்ந்து சுருதியை தாக்கி, பிளேடால் கழுத்தை அறுத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நரேசை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் மற்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story