நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மோதி வணிக நிறுவன ஊழியர் சாவு 2 பேர் படுகாயம்


நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மோதி வணிக நிறுவன ஊழியர் சாவு 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 13 Dec 2018 10:15 PM GMT (Updated: 13 Dec 2018 2:47 PM GMT)

நாகர்கோவிலில், மோட்டார் சைக்கிள் மோதி வணிக நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் ஆராட்டு ரோட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 44), நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் வணிக நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கற்பகலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

சுப்பிரமணியன் தினமும் அதிகாலை 2 மணி அளவில் நகர் முழுவதும் சினிமா போஸ்டர்கள் ஓட்டுவது வழக்கம். இதேபோல் நேற்று அதிகாலை செட்டிகுளம் பகுதியில் போஸ்டர் ஒட்டினார்.

பின்னர் தனது ஸ்கூட்டரில் கணேசபுரம் நோக்கி வந்தார். அப்போது அவருக்கு எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் இடலாக்குடி வேதநகரை சேர்ந்த முகமது பயஸ் மற்றும் அறுகுவிளையை சேர்ந்த அனிஷ்குமார் ஆகியோர் இருந்தனர்.

இந்த நிலையில் திடீரென ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சுப்பிரமணியன் ரோட்டில் தூக்கி வீசப்பட்டார். அவருக்கு தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் முகமது பயஸ் மற்றும் அனிஷ்குமார் ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று சுப்பிரமணியனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சைகள் பலன் அளிக்காமல் சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார்.

 முகமது பயசும், அனிஷ்குமாரும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story