வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலம் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலம் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 18 Dec 2018 10:30 PM GMT (Updated: 18 Dec 2018 7:46 PM GMT)

வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலம் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம்,

வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் டவுன் பட்டைக்கோவில் என்று அழைக்கப்படும் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை தரிசித்தனர். மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பட்டைக்கோவில் அருகே உள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் உற்சவரான பிரசன்ன வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ரத்தின அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சேலம் செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விழாவையொட்டி மூலவருக்கு தங்க கவசம் அணிவித்தும், பிரகாரத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தங்க கவசம் அணிவித்தும் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன. காலை முதல் மாலை வரை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அம்மாப்பேட்டை சிங்கமெத்தை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு, பெருமாளை வழிபட்டனர். இதையொட்டி மூலவருக்கும், தாயாருக்கும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவிலில் நேற்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியையொட்டி மூலவர், தாயாருக்கும், பிரகார சன்னதிகளில் உள்ள தெய்வங்களுக்கும் தங்ககவசம் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.

2-வது அக்ரஹாரம் லட்சுமி நாராயணசாமி கோவிலில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

இதேபோல பெரமனூர் வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி மூலவருக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதையொட்டி விநாயகர், ஆஞ்சநேயர் வெள்ளி கவசத்திலும், உற்சவர் பெருமாள் மற்றும் ஆண்டாள் சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

மகேந்திரபுரி எஸ்.சி.சி.பி. காலனியில் உள்ள வலம்புரி வரசித்தி விநாயகர் கோவில் மற்றும் சீனிவாசப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

சின்னதிருப்பதியில் உள்ள வெங்கடாசலபதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் நேற்று அதிகாலை நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பெரியபுதூரில் உள்ள வெங்கடேஸ்வரா பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மூலவருக்கு வைரமுடி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பேர்லேண்ட்சில் உள்ள வேங்கடாஜலபதி கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை வழிபட்டனர்.

இதுபோல சேலத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Next Story