கோமாரி நோய் தாக்குதல் எதிரொலி மணப்பாறை மாட்டுச்சந்தை மூடப்பட்டது விவசாயிகள், வியாபாரிகள் கடும் அவதி


கோமாரி நோய் தாக்குதல் எதிரொலி மணப்பாறை மாட்டுச்சந்தை மூடப்பட்டது விவசாயிகள், வியாபாரிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 18 Dec 2018 11:00 PM GMT (Updated: 18 Dec 2018 9:09 PM GMT)

கோமாரி நோய் தாக்குதல் காரணமாக மணப்பாறை மாட்டுச்சந்தை மூடப்பட்டதால் விவசாயிகள், வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மணப்பாறை,

மணப்பாறையில் புகழ்பெற்ற மாட்டுச்சந்தை உள்ளது. இந்த சந்தையானது ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை மதியம் வரை நடைபெறும். இந்த சந்தையில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச் செல்வார்கள்.

இதனால் வாரந்தோறும் சுமார் ரூ.3 கோடி முதல் 5 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும். இதுமட்டுமின்றி தீபாவளி, பக்ரீத் உள்ளிட்ட பண்டிகை நாட்கள் நெருங்கி விட்டால் வியாபாரம் இரு மடங்காக உயரும். இந்த சந்தையில் கறவை மாடுகள், உழவு மாடு, ஜல்லிக்கட்டு காளைகள், ஜெர்சி மாடுகள், பூரணி, வண்டி மாடு என பல்வேறு இன மாடுகள் விற்பனைக்கு வரும். இதுமட்டுமின்றி பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டால் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மாடுகள் அதிக அளவில் விற்பனை நடைபெறும் என்பதுடன் ஜல்லிக்கட்டு பிரியர்கள் வந்து தங்களுக்கு தேவையான காளைகளை வாங்கிச் செல்வார்கள். இதே போல் மாட்டுப் பொங்கலுக்கும் மாடுகளை வைத்து வழிபாடு செய்யும் பலரும் கடைசி நேரத்தில் மணப்பாறை மாட்டுச்சந்தையில் மாடுகளை வாங்கிச் செல்வார்கள்.

இந்நிலையில் மணப்பாறை மாட்டுச்சந்தைக்கு கடந்த வாரம் முதல் 4 வாரங்களுக்கு கோமாரி நோய் தாக்கத்தின் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தடை தொடர்பாக நகராட்சி மூலம் சந்தையின் கேட் பகுதியில் விளம்பர பதாகையும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை சந்தை நடைபெறவில்லை. சந்தை கேட் முழுவதுமாக இழுத்து மூடப்பட்டது. இருப்பினும் சில வாகனங்களில் மாடுகள் வந்தன. அவை அப்படியே திருப்பி அனுப்பப்பட்டன. இதே போல் சந்தைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது தெரியாமல் வந்த பல வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் இன்னும் இரண்டு வாரங்கள் சந்தைக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.

இருப்பினும் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சரியாக ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் இதுபோன்ற நேரங்களில் தான் மாடுகள் வாங்க முடியும், பலரும் தாங்கள் வைத்திருக்கும் மாடுகளை விற்று வீடுகளுக்கு வர்ணம் பூசுவது உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். ஆகவே சந்தைக்கு தடை உள்ளதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இதுமட்டுமின்றி சுமார் ரூ. 6 கோடி வரை விற்பனை தடைபட்டுள்ளது. மேலும் கோமாரி நோய் தாக்கம் இருக்கின்றதா என்பதை கால்நடை மருத்துவர்கள் மூலம் கண்காணித்து சந்தைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காலத்தை குறைத்திட மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story