கிருஷ்ணராயபுரம், நொய்யலில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்


கிருஷ்ணராயபுரம், நொய்யலில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 19 Dec 2018 10:45 PM GMT (Updated: 19 Dec 2018 9:16 PM GMT)

கிருஷ்ணராயபுரம், நொய்யலில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணராயபுரம்,

கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி சார்பில் வணிகர்களுக்கும், பொதுமக்களுக்குமான விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் பானு ஜெயராணி தலைமை தாங்கினார். இளநிலை உதவியாளர் முருகேசன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் பயன்பாட்டால் சுற்றுசூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடை குறித்தும், வருகிற ஜனவரி 1-ந்தேதிக்கு பிறகு பேரூராட்சி பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தாமை குறித்து கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முடிவில் சபரிமுத்து நன்றி கூறினார். முன்னதாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

நொய்யல், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் பிளாஸ்டிக் பை, கப்புகள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அதிகாரி பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வரும் ஜனவரி மாதம் முதல் 50 மைக்கரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்புகள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மீறி 50 மைக்கரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்தினாலோ, விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் மளிகை, காய்கறி, பலகாரம், ஓட்டல், மற்றும் பல்வேறு வகையான கடை உரிமையாளர்கள், வர்த்தகர்கள் சங்கம் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பேரூராட்சிப் பணியாளர்கள், கலந்து கொண்டனர். 

Next Story