கோரிக்கைகளை வலியுறுத்தி 7-ந்தேதி முதல் பெஸ்ட் ஊழியர்கள் வேலை நிறுத்த எச்சரிக்கை


கோரிக்கைகளை வலியுறுத்தி 7-ந்தேதி முதல் பெஸ்ட் ஊழியர்கள் வேலை நிறுத்த எச்சரிக்கை
x
தினத்தந்தி 20 Dec 2018 11:00 PM GMT (Updated: 20 Dec 2018 10:58 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக பெஸ்ட் ஊழியர்கள் எச்சரித்து உள்ளனர்.

மும்பை, 

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக பெஸ்ட் ஊழியர்கள் எச்சரித்து உள்ளனர்.

பெஸ்ட் குழுமம்

மும்பையில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பெஸ்ட் குழுமம் நகரில் மின்வினியோகம் மற்றும் பஸ் சேவைகளை இயக்கி வருகிறது. பெஸ்ட் குழுமம் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கே அந்த நிர்வாகம் திணறி வருகிறது. கடந்த காலங்களில் பெஸ்ட் ஊழியர்கள் மாத சம்பளத்திற்காகவும், தீபாவளி போனசிற்காகவும் வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.

எனவே பெஸ்ட் குழுமத்தை மாநகராட்சியுடன் இணைத்து பட்ஜெட் தாக்கல் செய்யவேண்டும் என பெஸ்ட் ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

வேலை நிறுத்த எச்சரிக்கை

இந்த கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம்(ஜனவரி) 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பெஸ்ட் ஊழியர்கள் யூனியன் எச்சரித்து உள்ளது.

இது குறித்து அந்த யூனியன் தலைவர் கூறுகையில், ‘பெஸ்ட் குழு மற்றும் மாநகராட்சி பொதுக்குழு ஒப்புதல் அளித்து விட்ட நிலையில், மாநகராட்சி நிர்வாகம் இன்னும் அதை மாநில நகர மேம்பாட்டுத்துறை ஒப்புதலுக்கு அனுப்பவில்லை.

எனவே ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தி இந்த வேலை நிறுத்தம் முடிவு செய்யப்பட்டு உள்ளது’ என்றார்.

Next Story