முட்டை ஓட்டின் தரம் குறைய வாய்ப்பு: கோழித்தீவனத்தில் அதிக எரிசக்தி, வைட்டமின் டி-3 தரவேண்டும் பண்ணையாளர்களுக்கு ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்


முட்டை ஓட்டின் தரம் குறைய வாய்ப்பு: கோழித்தீவனத்தில் அதிக எரிசக்தி, வைட்டமின் டி-3 தரவேண்டும் பண்ணையாளர்களுக்கு ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 21 Dec 2018 10:00 PM GMT (Updated: 21 Dec 2018 6:17 PM GMT)

முட்டை ஓட்டின் தரம் குறைய வாய்ப்பு உள்ளதால் அதை தடுக்க கோழித்தீவனத்தில் அதிக எரிசக்தியும், வைட்டமின் டி-3-ம் தொடர்ந்து தர வேண்டும் என பண்ணையாளர்களுக்கு ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று முதல் 4 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. அதேபோல் இன்று தென்கிழக்கு திசையில் இருந்தும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வடக்கில் இருந்தும், 25-ந் தேதி கிழக்கில் இருந்தும் காற்று வீசும். இன்று முதல் 3 நாட்களுக்கு 8 கி.மீட்டர் வேகத்திலும், 25-ந் தேதி 6 கி.மீட்டர் வேகத்திலும் காற்று வீசும்.

வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 87.8 டிகிரியும், குறைந்தபட்சமாக 68 டிகிரியாவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக முறையே 85, 85, 85, 85 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 45, 55, 55, 55 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் அடுத்த நான்கு நாட்களுக்கான வானிலையில் வடகிழக்கு பருவ மழையின் லேசான தாக்கத்தால் 2 மற்றும் 3-ம் நாட்களில் சற்றே அதிகமாக மேகமூட்டமும், மழையற்ற தன்மையும் நிலவும். பகல் மற்றும் இரவு வெப்ப அளவுகள் தொடர்ந்து 87.8 டிகிரி, 89.6 டிகிரி ஆகிய அளவுகளில் நிலவும். மேலும் இரவு வெப்ப அளவும் குறையும் காலகட்டம் இது. தீவன எடுப்பு அதிகரித்தும், முட்டையின் எடை கூடியும் காணப்படும். இதனால் முட்டை ஓட்டின் தரம் குறைய வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க தீவனத்தில் அதிக எரிசக்தியும், வைட்டமின் டி-3-ம் தொடர்ந்து தரப்பட வேண்டும். அடைக்குஞ்சுகளுக்கு தகுந்த வெப்பம் அளிப்பது மிகவும் அவசியம்.

கடந்த வாரம் கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும்்் இறக்கை அழுகல் நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது என தெரியவந்து உள்ளது. எனவே, பண்ணையாளர்கள் கோழிக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணுயிர் கிருமிகளான கிளாஸ்டிரியம், ஸ்டெப்லோகாக்கஸ் ஆகியவற்றின் தாக்கம் உள்ளதா? என கண்டறிந்து, அதற்கு தகுந்தாற்போல் சிறந்த தீவன மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். மேலும் குளிர்கால நோய்களின் தாக்கத்தை குறைக்க தகுந்த குளிர்கால மேலாண்மை முறைகளை கையாளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story