தலைவாசல் அருகே, குடும்ப தகராறில் மனைவிக்கு சரமாரி அரிவாள் வெட்டு டாஸ்மாக் விற்பனையாளர் கைது


தலைவாசல் அருகே, குடும்ப தகராறில் மனைவிக்கு சரமாரி அரிவாள் வெட்டு டாஸ்மாக் விற்பனையாளர் கைது
x
தினத்தந்தி 22 Dec 2018 10:00 PM GMT (Updated: 22 Dec 2018 8:01 PM GMT)

தலைவாசல் அருகே, குடும்ப தகராறில் மனைவியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய டாஸ்மாக் விற்பனையாளர் கைது செய்யப்பட்டார்.

தலைவாசல், 

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள பெரியேரி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ் (வயது 54). இவர் தலைவாசல் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தமிழ்செல்வி (48). இவர் பெரியேரி கிராமத்தில் அங்கன்வாடி பணியாளராக உள்ளார். இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கடந்த 4 ஆண்டுகளாக குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் ஒரே வீட்டில் வசித்து வந்தாலும், இருவரும் பேசுவது கிடையாது. இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த காமராஜ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவியின் தலை, கழுத்து, உடல் என 14 இடங்களில் சரமாரியாக வெட்டினார்.


இதில் அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம், பக்கத்தினர் அங்கு வந்து அவரை மீட்டு சின்ன சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் தமிழ்செல்வி சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து காமராஜை நேற்று கைது செய்து விசாரணை நடத்தினார்.

Next Story