போளூரில் எல்.ஐ.சி. முகவர் வீட்டில் திருடியவர் கைது - 8¼ பவுன் நகை பறிமுதல்


போளூரில் எல்.ஐ.சி. முகவர் வீட்டில் திருடியவர் கைது - 8¼ பவுன் நகை பறிமுதல்
x
தினத்தந்தி 25 Dec 2018 10:45 PM GMT (Updated: 25 Dec 2018 10:26 PM GMT)

போளூரில் எல்.ஐ.சி. முகவர் வீட்டில் திருடியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8¼ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

போளூர்,

போளூர் எஸ்.எம்.டி. நகரில் வசிப்பவர் முத்துக்குமார், எல்.ஐ.சி. முகவராக உள்ளார். இவர் கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் வெளியே சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பினார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்து பீரோவை உடைத்து அதிலிருந்த 8¼ பவுன் நகை, 400 கிராம் வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்- இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது முத்துக்குமார் வீட்டில் திருடியது காஞ்சி கிராமத்தை சேர்ந்த சித்திக் என்ற ஷாஜகான் (வயது 35) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 8¼ பவுன் நகை, 400 கிராம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருவண்ணாமலை உள்பட பல இடங்களில் திருடி உள்ளது தெரிந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story