தஞ்சை மாவட்டத்தில் திருட்டுபோன ரூ.7 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு - உரிமையாளர்களிடம், போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ஒப்படைத்தார்


தஞ்சை மாவட்டத்தில் திருட்டுபோன ரூ.7 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு - உரிமையாளர்களிடம், போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ஒப்படைத்தார்
x
தினத்தந்தி 28 Dec 2018 11:00 PM GMT (Updated: 28 Dec 2018 10:09 PM GMT)

தஞ்சையில் திருட்டுபோன ரூ.7 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டன. அவற்றை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் செல்போன் திருட்டு மற்றும் நடந்து செல்பவர்களிடம் செல்போன் பறித்து சென்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றன. ஒரு சில இடங்களில் மர்ம நபர்கள், தாக்கியும் செல்போன்களை பறித்துச்சென்றனர்.

இது குறித்து போலீஸ் நிலையங்களில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன. இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவிட்டார்.

அதன்பேரில் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், ஏட்டு குபேந்திரன், போலீஸ்காரர் குமார் ஆகியோர் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் சம்பந்தப்பட்ட செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் விசாரணை மேற்கொண்டனர்.

அதன்படி ரூ.7 லட்சம் மதிப்புள்ள 40 அன்ட்ராய்டு செல்போன்களை கண்டுபிடித்தனர். அந்த செல்போன்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் நேற்று, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

திருடப்பட்ட செல்போன் களின் ஐ.எம்.இ.ஐ நம்பர் மற்றும் செல்போன் நபர்கள் மூலம் செல்போன்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து நேரிடையாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்த செல்போன்கள் அனைத்தும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விலை உடையது ஆகும்.

செல்போன் வைத்திருப்பவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் செல்போன் கடைகளில் வாங்கியதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து பழைய செல்போன்கள் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அவ்வாறு வாங்கினால் அதன் உரிமையாளர் யார்? என்பதை தெரிந்து வைத்து அதன் பின்னர் வாங்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story