புத்தாண்டையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது


புத்தாண்டையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 31 Dec 2018 10:45 PM GMT (Updated: 31 Dec 2018 8:58 PM GMT)

புத்தாண்டையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாக விளங்குகிறது. கீழை நாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையுடன் அழைக்கப்படும் இந்த பேராலயம் அன்னை மரியின் புகழ்பரப்பும் புண்ணியதலமாக விளங்குகிறது. கிறிஸ்தவ ஆலய கட்டிடக்கலைக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய பசிலிக்கா என்ற பெருமைமிகு பிரமாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்று.

புத்தாண்டு கொண்டாட்டம்

பல்வேறு சிறப்புகள் பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இன்று (செவ்வாய்க்கிழமை) புத்தாண்டு பிறப்பையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். அப்போது பேராலய வளாகத்தில் வானவேடிக்கை நடத்தப் படும்.

புத்தாண்டு பிறப்பையொட்டி நடைபெறும் சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களாக தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்தவண்ணம் உள்ளனர். வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பேராலயத்தை சுற்றியுள்ள செடிகளில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு பேராலயம் வண்ணமயமாக காட்சியளிக்கிறது. வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் கடலில் குளித்து மகிழ்கிறார்கள்.

Next Story