அண்ணாநகரில் ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது


அண்ணாநகரில் ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது
x
தினத்தந்தி 3 Jan 2019 11:15 PM GMT (Updated: 3 Jan 2019 7:08 PM GMT)

அண்ணாநகரில் ரவுடி கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை அண்ணாநகர், அன்னை சத்யா நகர், 2-வது மெயின்ரோட்டை சேர்ந்தவர் சந்தானம் (வயது 36). ரவுடியான இவர், நேற்று முன்தினம் இரவு அன்னை சத்யா நகர், 8-வது தெரு சந்திப்பில் கடை நடத்தி வரும் தனது தாய் ஷீபாராணியை பார்க்க நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள், சந்தானத்தின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி, சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்மநபர்களை தேடி வந்தனர்.

போலீஸ் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ராபர்ட் என்ற சின்ன ராபர்ட்(21) என்பவர் தலைமையிலான ரவுடிகள், சந்தானத்தை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அண்ணா நகரில் பதுங்கி இருந்த சதீஷ்(25), ஜோசப்(19), விமல்(20) மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட 3 சிறுவர்கள் என 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

கொலையான சந்தானம், அரும்பாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடி ராதா என்ற ராதாகிருஷ்ணனின் கூட்டாளி. இவர் மீது கொலை, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த 2 வருடங்களாக சந்தானம், ரவுடிசத்தை கைவிட்டு திருந்தி, பெயிண்டராக வேலை செய்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்த ராபர்ட், அவருடைய தம்பி ஜோசப் ஆகியோர் அண்ணா நகர் பகுதியில் ரவுடிகளாக வலம் வந்தனர். இரவு நேரங்களில் கும்பலாக நின்று கொண்டு இருப்பார்கள். அப்போது தனது தாயை பார்க்க வரும் சந்தானம், ரவுடியிசம் வேண்டாம். என்னை போல் வந்துவிடாதீர்கள் என்று அவர்களுக்கு அறிவுரை கூறினார்.

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது புத்தாண்டுக்குள் சந்தானத்தை தீர்த்து கட்டுவதாக ராபர்ட் தெரிவித்து உள்ளார். ராபர்ட் தரப்பினர் ரவுடிகளாக வலம் வந்தாலும் அங்கு சந்தானத்துக்கே செல்வாக்கு இருந்தது.

இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த ராபர் தரப்பினர், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தாயை பார்க்க வந்த சந்தானம் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவரை வெட்டிக்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான ராபர்ட்டை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story