பொன்னமராவதி அருகே 5 தலைமுறைகள் கண்ட முதியவர் மரணம் பாடாலூரில் 112 வயது தாத்தாவும் சாவு


பொன்னமராவதி அருகே 5 தலைமுறைகள் கண்ட முதியவர் மரணம் பாடாலூரில் 112 வயது தாத்தாவும் சாவு
x
தினத்தந்தி 3 Jan 2019 10:45 PM GMT (Updated: 3 Jan 2019 8:12 PM GMT)

பொன்னமராவதி அருகே 5 தலைமுறைகளை கண்ட முதியவர் மரணமடைந்தார். பாடாலூரில் 112 வயது தாத்தாவும் இறந்தார்.

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தை சேர்ந்தவர் செங்கமலை கவுண்டர்(வயது 112). விவசாயி. இவரது மனைவி அழகம்மாள். இந்த தம்பதிக்கு முத்துசாமி(72) என்ற மகனும், தங்கம்மாள், மீனாட்சி என 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் சிறிய வயதில் இருக்கும்போதே தாய் அழகம்மாள் இறந்து விட்டார். செங்கமலை தனது மகன் முத்துசாமி வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென்று செங்கமலைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் அவர் இறந்தார். இதையடுத்து செங்கமலையின் உடலுக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் அவருடைய உடல் சுடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு எரியூட்டப்பட உள்ளது. 4 தலைமுறைகளை கண்ட செங்கமலைக்கு 9 பேரக்குழந்தைகளும், 16 கொள்ளு பேரக் குழந்தைகளும் உள்ளனர்.

இதுகுறித்து செங்கமலையின் மகன் முத்துசாமி கூறுகையில், எனது தந்தைக்கு 112 வயது ஆகிறது. எங்களுக்கு சிறிய வயதாக இருக்கும்போதே தாய் அழகம்மாள் இறந்து விட்டார். இதனால் எங்களை தந்தை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினார். வயது முதிர்வு ஏற்பட்டதால் அவர் எனது வீட்டில் வசித்து வந்தார். இவ்வளவு வயதானாலும், அவர் எங்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களுக்கு நடந்தே சென்று சுற்றிப்பார்ப்பார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி நடந்து வந்து விடுவார். மேலும் அவருடைய வேலைகளை அவரை செய்து கொள்வார். யாரையும் தொந்தரவு செய்யமாட்டார். இயற்கையான முறையில் விவசாயம் செய்த காய்கறிகளை சாப்பிட்டதால் தான் எனது தந்தை ஆரோக்கியமாக இருந்தார். அவருக்கு இறக்கும் வரை கண்பார்வையும், காது கேட்கும் திறனும் நன்றாகவே இருந்தது. இத்தனை ஆண்டுகளாக வழிகாட்டியாக இருந்த அவரது இறப்பு எங்களுக்கு பேரிழப்பாகும் என்றார்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கோவனூர் பகுதியை சேர்ந்தவர் காப்பு கட்டி முருகன் (வயது 120). இவருக்கு 6 மகன்கள் உள்ளனர். இதில் வயது முதிர்வின் காரணமாக 5 மகன்கள் இறந்து விட்டனர். இதனால் காப்பு கட்டி முருகன் தனது 4-வது மகன் பழனியப்பன் வீட்டில் வசித்து வந்தார். உடல் ஆரோக்கியத்துடன் இருந்த அவர், அவருடைய வேலைகளை அவரே செய்து வந்தார். இந்நிலையில் காப்பு கட்டி முருகன் நேற்று இறந்தார்.

இதையடுத்து கிராமமக்கள் மற்றும் உறவினர்கள் காப்பு கட்டி முருகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இறுதி சடங்குகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. 5 தலைமுறைகளை கண்ட காப்பு கட்டி முருகனுக்கு 11 பேரன், பேத்திகளும், 20 கொள்ளுப்பேரன், பேத்திகளும், 16 எள்ளுபேரன், பேத்திகளும் உள்ளனர்.

இதுகுறித்து பழனியப்பன் கூறுகையில், எனது தந்தைக்கு 120 வயது ஆகிறது. தற்போது எங்கள் குடும்பத்தில் எனது தந்தையின் பேரன், பேத்திகள் என 36 பேர் உயிருடன் இருக்கிறார்கள். எனது தந்தை இறக்கும் வரை கண்பார்வையும், காது கேட்கும் திறனும் நன்றாக இருந்தது. அவர் எங்கள் பகுதியில் உள்ள கோவிலுக்கு தினமும் நடந்து சென்று வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உறவினர்களிடம் பேசிவிட்டு படுக்க சென்றார். நேற்று காலை எழுந்து பார்த்தப்போது அவர் இறந்து விட்டார். 

Next Story