அமெரிக்க வாலிபர் விவகாரம்: சென்னை சுற்றுச்சூழல் ஆர்வலரிடம் போலீசார் 3 மணி நேரம் விசாரணை கருப்புக்கொடி காட்டிய 5 வக்கீல்கள் கைது


அமெரிக்க வாலிபர் விவகாரம்: சென்னை சுற்றுச்சூழல் ஆர்வலரிடம் போலீசார் 3 மணி நேரம் விசாரணை கருப்புக்கொடி காட்டிய 5 வக்கீல்கள் கைது
x
தினத்தந்தி 7 Jan 2019 10:45 PM GMT (Updated: 7 Jan 2019 9:38 PM GMT)

தூத்துக்குடிக்கு வந்த அமெரிக்க வாலிபர் விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரிடம் போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவருக்கு கருப்புக்கொடி காட்டிய 5 வக்கீல்கள் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி,

அமெரிக்க நாட்டில் உள்ள கலிபோர்னியா ஓக்லாந்தை சேர்ந்தவர் மார்க் சியல்லா (வயது 35). இவர் கடந்த 27-ந் தேதி தூத்துக்குடிக்கு வந்தார். அவர் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களை சந்தித்து பேசினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையிலான போலீசார் அமெரிக்க வாலிபர் மார்க் சியல்லாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சுற்றுலா விசாவில் வந்த அவர் விதிமுறை மீறலில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. அதன்பேரில், விசா ரத்து செய்யப்பட்டு அவர் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

மேலும் அமெரிக்க வாலிபரை சந்தித்து பேசியதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் பாத்திமா பாபு, ராஜா, ரீகன், பிரின்ஸ் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தொடர்ந்து அமெரிக்க வாலிபர் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சென்னையை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமனுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.

அதன்பேரில், அவர் நேற்று காலை 11-15 மணிக்கு தூத்துக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரானார். அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) ஆல்பர்ட் ஜான் ஆகியோர் துருவி, துருவி விசாரணை நடத் தினர். இந்த விசாரணை மதியம் 2-15 மணி வரை நீடித் தது. அதாவது, 3 மணி நேரம் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார் கள்.

இந்த நிலையில் 13 பேர் சாவுக்கு காரணமானவரை கைது செய்ய வேண்டும் என்றும், நித்யானந்த் ஜெயராமனுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருப்புக்கொடி காட்டி வக்கீல்கள் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு திடீரென ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்திய 5 வக்கீல்களை கைது செய்தனர்.

விசாரணைக்குப்பின் நித்யானந்த் ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் எனக்கும் என்ன தொடர்பு? மார்க் சியல்லாவுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? ஆகிய விஷயங்கள் குறித்து போலீஸ் விசாரணையில் கேள்விகள் கேட்கப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஸ்டெர்லைட் போராட்டத்துடன் எனக்கு தொடர்பு உள்ளது. இதில் சட்ட ரீதியாக, அறிவியல் ரீதியாக ஸ்டெர்லைட் தொழிற்சாலை மற்றும் நிர்வாகம் செய்து உள்ள குற்றங்கள், தவறுகளை எடுத்துக்காட்டி தூத்துக்குடி மக்கள் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறேன்.

மார்க் சியல்லா என்ற அமெரிக்க பத்திரிகையாளர் தூத்துக்குடி வந்தார். அவர் முதலில் என்னை தொடர்பு கொண்டார். அவருக்கு பாத்திமா பாபு எண்ணை கொடுத்ததாக தெரிவித்து உள்ளேன். இதற்கு முன்பு எனக்கு அவரை தெரியாது. அவர் உண்மையான பத்திரிகையாளர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதனையும் பதிவு செய்து கொண்டார்கள். இந்த விசாரணை முடிந்து விட்டது.

ஸ்டெர்லைட் ஆலை செய்து உள்ள 5 குற்றங்கள் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. அதுதவிர பல குற்றங்கள் உள்ளன. அதன் மீது அரசு கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி கோர்ட்டில் இந்த வழக்கை தொடர வேண்டும். வழக்கு தொடர்ந்தால் ஒட்டுமொத்த குற்றங்களின் ஆழம் வெளிவர வாய்ப்பாக இருக்கும். உச்சநீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) 2 வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கும், பசுமை தீர்ப்பாயம் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு வருகிறது.

அந்த வழக்கில் பாத்திமா பாபு, ராஜா ஆகியோர் தங்களையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வலுவான வாதங்களை முன்வைத்து உள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும் ஒவ்வொருவருக்கும் ஒரு பிழைப்பு இருக்கிறது. அதன்மூலம் தான் பணம் வருகிறது. நான் எழுத்தாளராகவும், ஒரு ஊடகவியல் கல்லூரியில் ஆசிரியராகவும் உள்ளேன். இதன்மூலம் வருமானம் வருகிறது. இதைவிட அதிகமான பணம் எனக்கு தேவை கிடையாது.
 இவ்வாறு அவர் கூறி னார்.

Next Story