இந்தி தெரியாததால் ‘மும்பை விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டேன்’ தமிழக வாலிபர் குற்றச்சாட்டால் பரபரப்பு


இந்தி தெரியாததால் ‘மும்பை விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டேன்’ தமிழக வாலிபர் குற்றச்சாட்டால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Jan 2019 11:00 PM GMT (Updated: 10 Jan 2019 10:29 PM GMT)

இந்தி தெரியாததால் ‘மும்பை விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டேன்’ என தமிழக வாலிபரின் குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை,

மதுரையை சேர்ந்தவர் ஆப்ரகாம் சாமுவேல் (வயது27). இவர் அமெரிக்காவின் போட்ஸ்டாம் பகுதியில் உள்ள கிளார்க்சன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். சமீபத்தில் ஆப்ரகாம் சாமுவேல் மதுரை வந்தார். இந்தநிலையில் அவர் விடுமுறை முடிந்து கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவுக்கு புறப்பட்டார். சென்னையில் இருந்து மும்பை வந்த அவர், பாரீஸ் வழியாக அமெரிக்கா சென்றார்.

இதில், இந்தி தெரியாததால் மும்பை விமான நிலையத்தில் ஆப்ரகாம் சாமுவேலின் ஆவணங்களை சாிபார்க்க குடியுரிமை அதிகாரி மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர், டுவிட்டரில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

இந்தி தெரியாததால் அவமதிப்பு

‘‘ஆங்கிலம், தமிழ் தெரிந்தும் இந்தி தெரியாததால் மும்பை விமான நிலையம் 33-வது கவுண்ட்டரில் எனது ஆவணங்களை சரிபார்க்க குடியுரிமை அதிகாரி மறுத்துவிட்டார். இது எவ்வளவு ஆபத்தானது! இது குறித்து புகார் அளித்து உள்ளேன். நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்’’ என கூறப்பட்டுள்ளது.

இந்த டுவிட்டர் பதிவை 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்து உள்ளனர். மேலும் 1,700-க்கும் மேற்பட்டவர்கள் ரீடுவிட் செய்து இருந்தனர்.

ஆப்ரகாம் சாமுவேல் தனது மற்றொரு டுவிட்டர் பதிவில், ‘‘இதுபோன்ற காரணங்களால் தான் தேசிய கட்சிகளால் தமிழ்நாட்டில் கால்பதிக்க முடிவதில்லை. அந்த அதிகாரி என்னிடம் ஆங்கிலத்தில் பேசாமல் தமிழ் தெரிந்த அதிகாரி உள்ள கவுண்ட்டருக்கு செல்ல அனுப்பினார். நான் இந்தியனாக பெருமைப்படுகிறேன். அதைவிட தமிழனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். அதுதான் உங்களுக்கு பிரச்சினையென்றால் இந்தியன் என்று சொல்லி கொள்ள உங்களுக்கு தான் தகுதியில்லை. நான் இந்தியன். இந்தி பேசமாட்டேன்’’ என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், ‘தங்களுடைய அழகான மொழியை பேசும் இந்தியர்களை அவமதிக்காதீர்கள்’ என மற்றொரு டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

ஆப்ரகாம் சாமுவேல் தனது டுவிட்டர் பதிவுகளில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரையும் சோ்த்து உள்ளார்.

தமிழ்நாட்டுக்கு போய்விடு

மேலும் இந்த சம்பவம் குறித்து ஆப்ரகாம் சாமுவேலிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

எனக்கு முன்னாள் ஒரு வெளிநாட்டு பெண் நின்று கொண்டு இருந்தார். அவரிடம் அந்த அதிகாரி ஆங்கிலத்தில் பேசினார். என்னை பார்த்தவுடன் நான் இந்தி புரிந்து கொள்வேன் என அவர் எதிர்பார்த்தார். நான் அவரிடம் மன்னித்து கொள்ளுங்கள். எனக்கு இந்தி தெரியாது என்றேன். உடனே அவர் எனது ஆவணங்களை வீசி எரிந்துவிட்டு அருகில் உள்ள கவுண்ட்டருக்கு செல்லுமாறு கூறினார். தமிழ்நாட்டுக்கு திரும்ப செல்லுமாறு என்னை பார்த்து மீண்டும், மீண்டும் சொன்னார்.

இது குறித்து நான் அங்கு இருந்த மூத்த அதிகாரியிடம் புகார் செய்தேன். ஆனால் அப்போதும் அந்த அதிகாரியின் நடவடிக்கைகள் மாறவில்லை. மீண்டும் அவர் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்தியாவில் இருந்தால் இந்தி கற்றுக்கொள் அல்லது தமிழ்நாட்டுக்கு போய்விடு என்றார். எனவே நான் அருகில் உள்ள கவுண்ட்டரில் ஆவணங்களை சரிபார்த்துவிட்டு கிளம்பிவிட்டேன். எனது விமானத்திற்கு நேரமாகிவிட்டதால் எழுத்துப்பூர்வமாக என்னால் புகார் அளிக்க முடியவில்லை. எனினும் இதுகுறித்து வெளிநாடு மண்டல பதிவு அலுவலகத்தில் இ-மெயில் மூலம் புகார் அளிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் குறித்து மும்பை போலீஸ் சிறப்பு பிரிவு கூடுதல் கமிஷனர் சுப்ரியா பாட்டீல் கூறும்போது, வாலிபர் அளித்த புகாரில் உண்மை உள்ளதா? என விசாரித்து வருகிறோம். புகாரில் உண்மை இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

மும்பை விமான நிலையத்தில் இந்தி தெரியாததால் தமிழக வாலிபர் அவமதிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Next Story