காதல் திருமணம் செய்த லாரி நிறுவன மேலாளர் தற்கொலை மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி


காதல் திருமணம் செய்த லாரி நிறுவன மேலாளர் தற்கொலை மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி
x
தினத்தந்தி 12 Jan 2019 10:30 PM GMT (Updated: 12 Jan 2019 4:17 PM GMT)

நாமக்கல்லில் காதல் திருமணம் செய்த லாரி நிறுவன மேலாளர், மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல், 

நாமக்கல் அய்யம்பாளையம் எஸ்.பி.கே. நகரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 32). இவர் நாமக்கல்லில் உள்ள லாரி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு மூர்த்தி அணியாபுரம் அருகே உள்ள தோளூரை சேர்ந்த பிரியா (25) என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணமான 6 மாதத்தில் பிரியா, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாயார் வீட்டுக்கு பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து மூர்த்தி மனைவியை குடும்பம் நடத்த வருமாறு தொடர்ந்து அழைத்து வந்தார். ஆனால் பிரியா கணவருடன் சேர்ந்து வாழ மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த மூர்த்தி நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்தபோது அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை தின்று விட்டார். உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து அவரது அண்ணன் சிலம்பரசன் நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story