கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்


கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 12 Jan 2019 10:30 PM GMT (Updated: 12 Jan 2019 5:06 PM GMT)

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கரும்பு அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

உப்புக்கோட்டை, 

பொங்கல் பண்டிகை கொண்டாட இன்னும் 2 நாட்களே இருக்கிறது. பொங்கல் பண்டிகை என்றாலே நமக்கு நினைவுக்கு கரும்பை வருவது தித்திக்கும் கரும்பு தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கரும்பை விரும்பி சாப்பிடுவார்கள். இதற்காக கரும்பு விற்பனை ஜோராக நடக்கும்.

தேனி மாவட்டத்தில் சின்னமனூர், கூழையனூர், கோட்டூர், சீலையம்பட்டி பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்கு அறுவடை செய்யும் வகையில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. அதன்படி சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. முல்லைப்பெரியாறு பாசனத்தால் கரும்பு நன்கு விளைச்சல் அடைந்துள்ளது.

குறிப்பாக இந்த பகுதிகளில் விளையும் கரும்பு அதிக இனிப்பு சுவை கொண்டதாக இருக்கும். இதனால் வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு கரும்புகளை வாங்கி செல்கின்றனர். அதன்படி 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.180 முதல் ரூ.250 வரை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இங்கிருந்து கரும்புகள் லாரிகளில் ஏற்றப்பட்டு மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. கரும்புகள் நன்கு விளைச்சல் அடைந்துள்ளதாலும், ஓரளவு லாபம் கிடைப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கோட்டூரை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில் ‘நான் ஒரு ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்தேன். முல்லைப் பெரியாறு பாசனம் மற்றும் நல்ல மழை பெய்ததாலும் கரும்புகள் நன்றாக விளைச்சல் அடைந்துள்ளது.

இதனால் கரும்புகளை கொள்முதல் செய்ய வியாபாரிகள் குவிந்து வருகின்றனர். கட்டுப்படியான விலையும் கிடைக்கிறது’ என்றார்.

Next Story