மும்பை- கோவா நெடுஞ்சாலையில் கியாஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


மும்பை- கோவா நெடுஞ்சாலையில் கியாஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 12 Jan 2019 9:54 PM GMT (Updated: 12 Jan 2019 9:54 PM GMT)

மும்பை- கோவா நெடுஞ்சாலையில் கியாஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மும்பை,

மும்பை கோவா நெடுஞ்சாலையில் நேற்று கியாஸ் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி பென்-பன்வெல் இடையே காராபாடா பகுதியில் வந்தபோது, திடீரென நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கியாஸ் டேங்கரில் கசிவு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இந்த சம்பவத்தால் சுமார் 10 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு 3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புபடையினர், கவிழ்ந்து கிடந்த டேங்கர் லாரியில் கியாஸ் கசிவை சரிசெய்தனர். பின்னர் டேங்கர் லாரியை அப்புறப்படுத்தினார்கள். அதன் பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அந்த சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story