குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து 12 காங். எம்.எல்.ஏ.க்கள் 16-ந்தேதி ராஜினாமா? பா.ஜனதாவில் சேரப்போவதாக பரபரப்பு தகவல்


குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து 12 காங். எம்.எல்.ஏ.க்கள் 16-ந்தேதி ராஜினாமா? பா.ஜனதாவில் சேரப்போவதாக பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 13 Jan 2019 11:37 PM GMT (Updated: 13 Jan 2019 11:37 PM GMT)

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் வருகிற 16-ந்தேதி ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேரப்போவதாக தகவல்வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து உருவாகியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டசபை ேதர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வரும் இருந்து வருகின்றனர். ஆனால் 104 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல். ஏ.க்களை இழுக்க பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது.

குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கூட்டணி ஆட்சியை கவிழ்த்து விட்டு பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா 2 முறை முயன்றும் தோல்வியில் முடிந்தது. இதனால் ஆபரேஷன் தாமரையை பா.ஜனதா கைவிட்டு விட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், ஆபரேஷன் தாமரையை பா.ஜனதா மீண்டும் கையில் எடுத்திருப்பதாகவும், இந்த முறை காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை இழுக்க தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ரமேஷ் ஜார்கிகோளி, அதுபோல, மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருந்து வரும் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான நாகேந்திரா மற்றும் ஆனந்த்சிங் ஆகிய 3 பேரும் டெல்லியில் முகாமிட்டு இருப்பதாகவும், அவர்கள் பா.ஜனதா தலைவர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அவர்கள் 3 பேர் தவிர மேலும் 9 எம்.எல். ஏ.க்கள் பா.ஜனதாவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள ரமேஷ் ஜார்கிகோளி, ஆனந்த்சிங், நாகேந்திரா, பி.சி.பட்டீல், பீமா நாயக், ஹொலகேரி, பிரதாப் பட்டீல், கணேஷ் ஹூக்கேரி, உமேஷ் ஜாதவ் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் அந்த 12 எம்.எல்.ஏ.க்களும் வருகிற 16-ந் தேதி தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜனதாவில் சேர திட்டமிட்டு வருவதாகவும், பா.ஜனதா தலைவர்களுடன் அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் 12 எம்.எல் .ஏ.க் களில் ஒருவரான கணேஷ் ஹூக்கேரி தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக போவதில்லை என்றும், பா.ஜனதாவில் சேரும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ரமேஷ் ஜார்கிகோளி, ஆனந்த் சிங், நாகேந்திரா உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. என்றாலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க நினைக்கும் பா.ஜனதாவுக்கு தக்க பதிலடி கொடுக்க முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மந்திரி டி.கே.சிவக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘கூட்டணி ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் பேரம் பேசும் ஆதாரங்கள் உள்ளன. அதனை கூடிய விரைவில் வெளியிடுவோம். 3 எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் காங்கிரஸ் கட்சியினரா?, பா.ஜனதாவினரா? என்று சொல்ல முடியாது. கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை’ என்றார்.

இதுபற்றி பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா நேற்று கூறும்போது, ‘காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுடன் தொடர்பில் இருப்பதாக வரும் தகவல்கள் உண்மையல்ல. அந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் இருப்பது பற்றி எனக்கு தெரியாது. நாடாளுமன்ற தேர்தலுக்காக பா.ஜனதா தயாராகி வருகிறது. அதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம்’ என்றார்.

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் 12 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகி இருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக அரசியல் ஆலோசகர்கள் கருது கிறார்கள்.

Next Story